பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாமின் கருத்துக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மதிப்பு கொடுக்காத பட்சத்தில், உடனடியாக கேப்டன் பொறுப்பை ராஜினாமா செய்துவிட்டு, நடந்த விஷயங்களை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று ஷோயப் அக்தர் அறிவுறுத்தியுள்ளார். 

பாகிஸ்தான் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 4 டி20 போட்டிகளில் ஆடுகிறது. அதன்பின்னர் அப்படியே ஜிம்பாப்வே சென்று 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும் ஆடுகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்த சுற்றுப்பயணங்களுக்கான பாகிஸ்தான் டி20 அணி தேர்வு கேப்டன் பாபர் அசாமுக்கு திருப்தியளிக்கவில்லை. அணி தேர்வு குறித்த தனது அதிருப்தியை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் தெரியப்படுத்தினார் கேப்டன் பாபர் அசாம். ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதுதொடர்பாக பாகிஸ்தான் அணியின் தலைமை தேர்வாளர் முகமது வாசிம் மற்றும் கேப்டன் பாபர் அசாமுக்கு இடையே வாக்குவாதமும் நடந்திருக்கிறது. ஆனால் அதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை என்றாலும், பாபர் அசாமின் அதிருப்தியும், அதன் விளைவாக மோதல் மூண்டதும் உண்மைதான்.

இந்நிலையில், பாபர் அசாமுக்கு அணி தேர்வு திருப்தியளிக்கவில்லை; அவரது பேச்சுக்கு மரியாதை இல்லை என்றால் உடனடியாக கேப்டன் பொறுப்பை ராஜினாமா செய்து அதை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். அப்படி செய்யாமல் மௌனம் காத்தால், அடுத்த சர்ஃபராஸ் அகமது ஆகிவிடுவார் என்று ஷோயப் அக்தர் எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள ஷோயப் அக்தர், அணி தேர்வு குறித்த அதிருப்தியை பாபர் அசாம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் தெரியப்படுத்தியும், அவரது கருத்து மதிக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டது. பாபர் அசாம் அதிருப்தியில் இருந்தால், அவர் உடனடியாக ராஜினாமா செய்து, என்ன நடந்தது என்ற விவரத்தை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். இல்லையெனில் சர்ஃபராஸ் பார்ட் 2 ஆகிவிடுவார் பாபர் அசாம் என்று அக்தர் தெரிவித்தார்.

பாகிஸ்தான் டி20 அணி:

பாபர் அசாம்(கேப்டன்), ஷதாப் கான், ஷர்ஜீல் கான், முகமது ஹஃபீஸ், ஹைதர் அலி, டனிஷ் அஜீஸ், ஆசிஃப் அலி, முகமது நவாஸ், ஃபஹீம் அஷ்ரஃப், முகமது வாசிம், முகமது ரிஸ்வான், சர்ஃபராஸ் அகமது, ஷாஹீன் அஃப்ரிடி, ஹாரிஸ் ராஃப், முகமது ஹஸ்னைன், ஹசன் அலி, அர்ஷத் இக்பால், உஸ்மான் காதிர்.