என் கெரியரில் நான் எதிர்கொண்டதிலேயே பெஸ்ட் பவுலர் அவருதான்.. இந்திய சீனியர் வீரரின் நேர்மையான, தரமான தேர்வு
இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரரான ஷிகர் தவான், தனது கெரியரில் தான் எதிர்கொண்டதிலேயே யார் பெஸ்ட் பவுலர் என்று தெரிவித்துள்ளார்.
இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் தொடக்க வீரர் ஷிகர் தவான். 2010ம் ஆண்டு இந்திய ஒருநாள் அணியில் அறிமுகமான தவான், 2013ல் டெஸ்ட் அணியில் அறிமுகமானார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே சதமடித்து அசத்திய தவான், அதன்பின்னர் டெஸ்ட் அணியில் நிரந்தர இடம்பிடித்தார். ஆனால் அவர் அந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளாததால், 2018ல் டெஸ்ட் அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டார்.
ஆனால் ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் முதன்மை தொடக்க வீரர் தேர்வாக இருந்துவருகிறார். ரோஹித்துடன் இணைந்து பல சிறப்பான இன்னிங்ஸ்களை ஆடி அதிரடியான தொடக்கத்தை இந்திய அணிக்கு அமைத்து கொடுத்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில், அதிகமான ரன்களை குவித்த தொடக்க ஜோடிகளின் பட்டியலில், 4802 ரன்களை குவித்துள்ள ரோஹித் சர்மா - ஷிகர் தவான் ஜோடி நான்காமிடத்தில் உள்ளது.
இந்திய அணியின் வெற்றிகரமான தொடக்க ஜோடிகளில் ரோஹித் - தவான் ஜோடியும் ஒன்று. தவான், 34 டெஸ்ட், 130 ஒருநாள் மற்றும் 61 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார்.
தனது கெரியரில் டேல் ஸ்டெய்ன், மிட்செல் ஸ்டார்க், ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் உள்ளிட்ட பல சிறந்த பவுலர்களை எதிர்கொண்டு ஆடியுள்ளார். இந்நிலையில், இர்ஃபான் பதானுடனான உரையாடலில், தான் எதிர்கொண்டதிலேயே சிறந்த பவுலர் யார் என்று தவான் தெரிவித்துள்ளார்.
உங்கள் கிரிக்கெட் கெரியரில் நீங்கள் எதிர்கொண்டதிலேயே யார் சிறந்த பவுலர் என்று தவானிடம் இர்ஃபான் பதான் கேட்டார். அதற்கு, ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் என்று தவான் பதிலளித்தார்.
மிட்செல் ஸ்டார்க் மிரட்டலான ஃபாஸ்ட் பவுலர். சமகால கிரிக்கெட்டின் மிகச்சிறந்த ஃபாஸ்ட் பவுலர். 2015 மற்றும் 2019 ஆகிய இரண்டு ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பைகளிலும் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்தியவர் மிட்செல் ஸ்டார்க். தொடர்ச்சியாக இரண்டு உலக கோப்பைகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய சாதனைக்கு சொந்தக்காரர். 2015 உலக கோப்பையை ஆஸ்திரேலிய அணி வென்றபோது, மிட்செல் ஸ்டார்க் தான் தொடர் நாயகன் விருதை வென்றார்.
150 கிமீ வேகத்திற்கு மேல் வீசுவதுடன் நன்றாக ஸ்விங்கும் செய்வார் என்பதால், அவரது பவுலிங் பல பேட்ஸ்மேன்களுக்கு சிம்மசொப்பனம் என்பது குறிப்பிடத்தக்கது.