வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியின் ரிசர்வ் வீரர்களாக ஷாருக்கான் மற்றும் சாய் கிஷோர் ஆகிய இருவரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவுள்ளது. வரும் பிப்ரவரி 6, 9 மற்றும் 11 ஆகிய தேதிகளில் 3 ஒருநாள் போட்டிகளும், பிப்வரி 16, 18, 20 ஆகிய தேதிகளில் 3 டி20 போட்டிகளும் நடக்கவுள்ளன.
ஒருநாள் போட்டிகள் அகமதாபாத்திலும், டி20 தொடர் கொல்கத்தா ஈடன் கார்டனிலும் நடக்கவுள்ளன. இந்த தொடர்களுக்கான ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டன.
இந்திய ஒருநாள் அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், ஷிகர் தவான், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், தீபக் ஹூடா, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), தீபக் சாஹர், ஷர்துல் தாகூர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஆவேஷ் கான்.
இந்திய டி20 அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), இஷான் கிஷன், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), வெங்கடேஷ் ஐயர், தீபக் சாஹர், ஷர்துல் தாகூர், ரவி பிஷ்னோய், அக்ஸர் படேல், யுஸ்வேந்திர சாஹல், வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ், புவனேஷ்வர் குமார், ஆவேஷ் கான், ஹர்ஷல் படேல்.
கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால், அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களுக்கு கொரோனா பாசிட்டிவ் ஆவதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதனால் முன்னெச்சரிக்கையாக, ஸ்டாண்ட் பை வீரர்களாக 2 தமிழக வீரர்கள் எடுக்கப்பட்டுள்ளனர்.
அதிரடி தமிழக வீரரான ஷாருக்கான் மற்றும் தமிழகத்தை சேர்ந்த ஸ்பின் ஆல்ரவுண்டரான சாய் கிஷோர் ஆகிய இருவரும் ஸ்டாண்ட் பை வீரர்களாக எடுக்கப்பட்டுள்ளனர். ஷாருக்கான் ஐபிஎல்லில் நன்றாக ஆடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்ததுடன், விஜய் ஹசாரே டிராபி மற்றும் சையத் முஷ்டாக் அலி தொடர் ஆகிய 2 உள்நாட்டு தொடர்களிலும் அபாரமாக ஆடினார். தமிழக அணிக்கு தனி ஒருவனாக பல வெற்றிகளை பெற்றுக்கொடுத்துள்ளார். வெற்றிக்கு வாய்ப்பே இல்லாமல் இருந்த போட்டிகளில் கூட, அதிரடியான ஃபினிஷிங்கால் வெற்றியை பெற்றுக்கொடுத்தார்.
சையத் முஷ்டாக் அலி தொடர் ஃபைனலில் கர்நாடகாவுக்கு எதிராக கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து தமிழக அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தார் ஷாருக்கான். விஜய் ஹசாரே தொடரின் காலிறுதியில் அதே கர்நாடகா அணிக்கு எதிராக 39 பந்தில் 79 ரன்களை குவித்த ஷாருக்கான், விஜய் ஹசாரே ஃபைனலில் 21 பந்தில் 42 ரன்கள் அடித்தார். எனவே அவரது திறமைக்கு மதிப்பு கொடுத்து இந்திய அணியின் ரிசர்வ் வீரராக எடுக்கப்பட்டுள்ளார்.
அதேபோல, ஸ்பின்னரான சாய் கிஷோர், விஜய் ஹசாரே தொடரில் அவரது பேட்டிங் திறமையையும் காட்டினார். எனவே அவருக்கும் இந்திய அணியில் இடம் கிடைத்துள்ளது.
