உங்க டிரெஸ்ஸிங் ரூமுக்கு வரலாமா கோலி..? ஸ்காட்லாந்து வீரர்களின் ஆசையை நிறைவேற்றிய இந்திய அணி..!
இந்திய அணியின் ஓய்வறையை பார்க்க வேண்டும் என்ற ஸ்காட்லாந்து வீரர்களின் ஆசையை இந்திய அணி நிறைவேற்றி வைத்தது. அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் செம வைரலாகிவருகிறது.
டி20 உலக கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. க்ரூப் 1-ல் இங்கிலாந்து அணியும், க்ரூப் 2-ல் பாகிஸ்தான் அணியும் அரையிறுதிக்கு முன்னேறிவிட்டன. க்ரூப் 1-லிருந்து அரையிறுதிக்கு 2வது அணியாக முன்னேற, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. க்ரூப் 2-ல் நியூசிலாந்து, ஆஃப்கானிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய 3 அணிகளுக்குமே வாய்ப்புள்ளது.
அந்தவகையில் அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்க பெரிய வெற்றியை பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் ஸ்காட்லாந்தை எதிர்த்து ஆடிய இந்திய அணி, இந்த தொடரில் முதல்முறையாக டாஸ் வென்றது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் ஆடிய ஸ்காட்லாந்தை வெறும் 85 ரன்களுக்கு சுருட்டியது இந்திய அணி. இந்திய அணி சார்பில் ஷமி மற்றும் ஜடேஜா ஆகிய இருவரும் அதிகபட்சமாக தலா 3 விக்கெட்டுகளையும், பும்ரா 2 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
வெறும் 86 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டியது இந்திய அணி. 7.1 ஓவரில் இந்த இலக்கை விரட்டிவிட்டால், நெட் ரன்ரேட்டில் ஆஃப்கானிஸ்தானை முந்தி, அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்கலாம் என்ற நிலையில், இந்த இலக்கை விரட்டிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் மற்றும் ராகுல் ஆகிய இருவரும் முதல் ஓவரிலிருந்தே அடித்து ஆடினர். ஸ்காட்லாந்து பவுலர்கள் போட்ட பந்துகளை எல்லாம் பவுண்டரிக்கும் சிக்ஸருக்கும் விளாசிய இவர்கள், 5 ஓவர்களில் 70 ரன்களை குவித்து கொடுத்தனர். ரோஹித் சர்மா 30 ரன்னுக்கு ஆட்டமிழக்க, 18 பந்தில் ராகுல் அரைசதம் அடிக்க, 6.3 ஓவரிலேயே இந்திய அணி இலக்கை அடித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை தக்கவைத்தது இந்திய அணி.
உலகின் தலைசிறந்த வீரர்களான விராட் கோலி, கேன் வில்லியம்சன் ஆகியோரிடமிருந்து நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ளை விழைகின்றனர் அசோஸியேட் அணியான ஸ்காட்லாந்து அணியின் வீரர்கள். அந்தவகையில், கோலி, ரோஹித், பும்ரா, அஷ்வின் என உலகின் தலைசிறந்த வீரர்கள் பலரை கொண்ட இந்திய அணியின் ஓய்வறையில் இந்திய வீரர்களுடன் கலந்துரையாட ஸ்காட்லாந்து அணி விரும்பியது.
இதுதொடர்பான விருப்பத்தை கேப்டன் கோலியிடம் தெரிவித்திருக்கின்றனர். ஸ்காட்லாந்து அணியின் கோரிக்கையை ஏற்று, இந்திய ஓய்வறைக்கு வரவழைக்கப்பட்ட ஸ்காட்லாந்து வீரர்களுடன், ரோஹித் சர்மா, விராட் கோலி, அஷ்வின் ஆகிய வீரர்கள் கலந்துரையாடினர்.
இதுதொடர்பான வீடியோவை பிசிசிஐ டுவிட்டரில் பகிர்ந்தது.
ஸ்காட்லாந்து கிரிக்கெட்டும் அந்த புகைப்படங்களை டுவிட்டரில் பகிர்ந்து தங்களது மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியது.