#ICCWTC ஃபைனல்: ரோஹித்துடன் அவருதான் தொடக்க வீரராக இறங்கணும்..! முன்னாள் தேர்வாளர் அதிரடி
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் ரோஹித் சர்மாவுடன் ஷுப்மன் கில் தான் தொடக்க வீரராக இறங்க வேண்டும் என்று முன்னாள் தேர்வாளர் சரண்தீப் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வரும் 18-22ல் சவுத்தாம்ப்டனில் நடக்கிறது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் ஃபைனலில் மோதுகின்றன.
சமபலம் வாய்ந்த இரு அணிகளும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் மோதுவதால் அந்த போட்டியின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இரு அணிகளும் சமபலத்துடன் திகழ்வதால் போட்டி மிகக்கடுமையாக இருக்கும்.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல், இந்திய அணி காம்பினேஷன், தொடக்க ஜோடி, பவுலிங் யூனிட் ஆகியவை குறித்து பல முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர். அந்தவகையில், ரோஹித்துடன் யார் தொடக்க வீரராக இறங்க வேண்டும் என்ற தனது கருத்தை தெரிவித்துள்ளார் சரண்தீப் சிங்.
ரோஹித் சர்மா தொடக்க வீரர் என்பது உறுதி. அவருடன் மயன்க் அகர்வால் - ஷுப்மன் கில் ஆகிய இருவரில் யார் தொடக்க வீரர் என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.
மயன்க் அகர்வால் ஆஸி., சுற்றுப்பயணத்தில் காயமடைந்ததன் விளைவாக, அந்த தொடரின் எஞ்சிய போட்டிகளிலும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் ஷுப்மன் கில் தான் தொடக்க வீரராக இறங்கினார். இங்கிலாந்துக்கு எதிராக ஷுப்மன் கில் சரியாக ஆடவில்லை. அதேவேளையில், நியூசிலாந்துக்கு எதிராக ஆடிய அனுபவத்தை பெற்றிருக்கிறார் மயன்க் அகர்வால். ஓபனிங் பேட்ஸ்மேனுக்கான இடத்திற்கு அவர்கள் இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள சரண்தீப் சிங், ஷுப்மன் கில் கிளாஸான பேட்ஸ்மேன். ரோஹித்துடன் இணைந்து டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் ஷுப்மன் கில் அபாரமாக ஆடுவார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இங்கிலாந்துக்கு எதிராக இந்தியாவில் நடந்த டெஸ்ட் தொடரில் கில் சரியாக ஆடவில்லை. ஆனாலும், அதிலிருந்து அவர் மீண்டு எழுவார் என்று நம்புவதாக தெரிவித்துள்ளார்.