சச்சின் டெண்டுல்கரின் சத சாதனையை இந்த ஆண்டே கோலி தகர்ப்பார்..! முன்னாள் பேட்டிங் கோச் நம்பிக்கை
விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரின் சத சாதனையை இந்த ஆண்டேமுறியடிக்க வாய்ப்புள்ளது என்று இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சமகாலத்தின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவருகிறார். 2019 நவம்பருக்கு பின் சதமடிக்காமல் இருந்துவந்த விராட் கோலி, ஆசிய கோப்பையில் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக சதமடித்து மீண்டும் தனது சத கணக்கை தொடங்கினார்.
சர்வதேச கிரிக்கெட்டில் ஒருநாள் போட்டிகளில் 44 சதங்கள், டெஸ்ட்டில் 27 சதங்கள் மற்றும் டி20 போட்டியில் ஒரு சதம் என மொத்தம் 72 சதங்களை விளாசி சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த 2வது வீரராக திகழ்கிறார்.
100 சதங்களுடன் ஆல்டைம் சாம்பியன் கிரிக்கெட்டரும், லெஜண்ட் பேட்ஸ்மேனுமான சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் உள்ளார். சச்சின் டெண்டுல்கரின் சத சாதனையை விராட் கோலி முறியடித்துவிடுவார் என நம்பப்படுகிறது.
சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட்டில் 51 சதங்களும், ஒருநாள் கிரிக்கெட்டில் 49 சதங்களும் விளாசியுள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் 44 சதங்கள் அடித்துள்ள கோலி, இன்னும் 6 சதங்கள் அடித்தால் ஒருநாள் போட்டியில் சச்சின் டெண்டுல்கரின் சத சாதனையை முறியடித்துவிடுவார்.
இந்த ஆண்டு ஒருநாள் உலக கோப்பை நடக்கவுள்ளதால் இந்திய அணி அதிகமான ஒருநாள் போட்டிகளில் ஆடவுள்ளதால், இந்த ஆண்டே சச்சின் சத சாதனையை முறியடிக்க வாய்ப்புள்ளதாக சஞ்சய் பங்கார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரும் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளருமான சஞ்சய் பங்கார், விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் 44 சதங்கள் அடித்துள்ளார். இந்த ஆண்டு இந்திய அணி 26-27 ஒருநாள் போட்டிகளில் ஆடவுள்ளது. எனவே இந்த ஆண்டே சச்சின் டெண்டுல்கரின் சாதனையை விராட் கோலி முறியடிக்க வாய்ப்புள்ளது என்றார் பங்கார்.