ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகள் நடக்கும் பாகிஸ்தான் ஆடுகளங்களை மிகக்கடுமையாக விமர்சித்துள்ளார் சல்மான் பட்.
பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா இடையே ராவல்பிண்டியில் நடந்த முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. 5 நாட்கள் ஆட்டத்தில் மொத்தமாகவே 14 விக்கெட்டுகள் மட்டுமே விழுந்தது. முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட் இழப்பிற்கு 476 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது.
மோசமான பிட்ச்:
இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி 459 ரன்களை குவித்தது. ஆஸ்திரேலிய அணியின் முதல் இன்னிங்ஸே கடைசி நாள் ஆட்டத்தின் முதல் செசனில் தான் முடிந்தது. அதன்பின்னர் 2வது இன்னிங்ஸை ஆடிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் இமாம் உல் ஹக் மற்றும் அப்துல்லா ஷாஃபிக் ஆகிய இருவருமே 77 ஓவர்கள் பேட்டிங் ஆடி முடித்தனர். இதையடுத்து போட்டி டிராவில் முடிந்தது.
முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 162 ஓவர்களும், ஆஸ்திரேலிய அணி 140 ஓவர்கள் பேட்டிங் ஆடின. 2வது இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 77 ஓவர்கள் பேட்டிங் ஆடியது. இந்த போட்டியில் மொத்தமாக வீசப்பட்ட 379 ஓவர்களில் வெறும் 14 விக்கெட்டுகள் மட்டுமே விழுந்தன. ஆஸ்திரேலிய அணி வெறும் 4 விக்கெட் மட்டுமே வீழ்த்தியது.
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் வந்ததிலிருந்து, டெஸ்ட் கிரிக்கெட்டில் பெரும்பாலான போட்டிகள் முடிவுகளை எட்டுகின்றன. அரிதினும் அரிதாகத்தான் டெஸ்ட் போட்டி டிரா ஆகிறது. அப்படியே டிராவானாலும் கடுமையாக போராடி டிரா செய்யும் நிலைமைதான் உள்ளது. அப்படியிருக்கையில், பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா இடையேயான ராவல்பிண்டி டெஸ்ட் அனைவருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதற்கு பிட்ச்சில் எதுவுமே இல்லாததுதான் காரணம். போட்டி கொஞ்சம் கூட சுவாரஸ்யம் இல்லாமல் படுமோசமாக இருந்தது. முதல் டெஸ்ட் நடந்த ராவல்பிண்டி பிட்ச் சராசரிக்கு கீழானது என்று போட்டி நடுவர் ரஞ்சன் மடுகல்லே ரிப்போர்ட் செய்ததையடுத்து, ஒரு டீமெரிட் புள்ளி வழங்கப்பட்டது.
ராவல்பிண்டி பிட்ச்சை தயார் செய்த விதத்தை இன்சமாம் உல் ஹக், ஷாஹித் அஃப்ரிடி உள்ளிட்ட பல முன்னாள் ஜாம்பவான்கள் விமர்சித்திருந்தனர். அந்தவகையில், வாசிம் அக்ரமும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
ராவல்பிண்டி ஆடுகளம் மட்டுமல்ல; 2வது டெஸ்ட் போட்டி நடந்துவரும் கராச்சி ஆடுகளமும் படுமட்டமாக உள்ளது. முதல் 2 நாட்களும் முழுமையாக பேட்டிங் ஆடியது ஆஸ்திரேலிய அணி. முதல் இன்னிங்ஸில் 556 ரன்களை குவித்தது ஆஸ்திரேலிய அணி.
ராவல்பிண்டி ஆடுகளம் தான் மோசம் என்றால், கராச்சி ஆடுகளமும் அதே மாதிரி இருந்ததால் கடுப்பான சல்மான் பட் மிகக்கடுமையாக விமர்சித்துள்ளார்.
சல்மான் பட் விமர்சனம்:
இதுகுறித்து பேசிய சல்மான் பட், ஷாஹீன் அஃப்ரிடி, ஹசன் அலி, நசீம் ஷா என தரமான ஃபாஸ்ட் பவுலர்கள் இருக்கிறார்கள். யாசிர் ஷா அணியில் இல்லை. எனவே லெக் ஸ்பின்னர் ஆடமுடியாது. அதனால் ஃபாஸ்ட் பவுலர்களுக்கு உதவிகரமான ஆடுகளத்தை அமைத்திருக்கலாம். நான் ஆடிய காலத்தில் இதுமாதிரியான ஸ்லோ மற்றும் லோ பிட்ச்களை பார்த்ததில்லை. டெஸ்ட் போட்டிகள் டிரா ஆவதற்கு ஆடுவதில்லை. கராச்சியில் இர்ஃபான் பதான் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியிருக்கிறார். அருமையான சீமிங் பிட்ச்சாக இருந்தது. ராவல்பிண்டி சீமிங் பிட்ச்சில் இந்திய அணி வெற்றி பெற்றிருக்கிறது என்றார் சல்மான் பட்.
