கொரோனா பாதிப்பு கொஞ்சம் கூட குறையல.. மருத்துவமனையில் அட்மிட் ஆன மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின்
கொரோனாவால் பாதிக்கப்பட்ட சச்சின் டெண்டுல்கர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், அவருக்கு வைரஸின் தாக்கம் குறையாததால், இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துவருகிறது. கடந்த ஒரே நாளில் 81,446 பேருக்கு தொற்று உறுதியானது. கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதை கடந்த மார்ச் 27ம் தேதி உறுதி செய்தார்.
கொரோனா பாசிட்டிவ் ஆனதையடுத்து, வீட்டில் தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டதாக தெரிவித்திருந்தார். வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டாலும், கடந்த 5 நாட்களாக சச்சின் டெண்டுல்கருக்கு வைரஸின் தாக்கம் குறையாததால் மருத்துவர்களின் ஆலோசனையின்படி இன்று கொரோனா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த தகவலை டுவிட்டரில் உறுதி செய்துள்ள சச்சின் டெண்டுல்கர், அனைவரின் பிரார்த்தனைகளுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி என்றும், தான் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவேன் என்றும் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறும் அறிவுறுத்தியுள்ளார்.
சச்சின் டெண்டுல்கர் விரைவில் குணமடைய வேண்டுமென்று, அவரது கோடான கோடி ரசிகர்கள் பிரார்த்தனை செய்துவருகின்றனர்.