தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியின் துணை கேப்டனாக ஜஸ்ப்ரித் பும்ரா நியமிக்கப்பட்டது வியப்பாக இருப்பதாக தெரிவித்துள்ளார் முன்னாள் வீரர் சபா கரீம்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடிவரும் இந்திய அணி, டெஸ்ட் தொடர் முடிந்த பின்னர் ஒருநாள் தொடரில் ஆடவுள்ளது. ஜனவரி 19, 21 மற்றும் 23 ஆகிய தேதிகளில் 3 ஒருநாள் போட்டிகள் நடக்கவுள்ளன.
இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ரோஹித் சர்மா காயத்திலிருந்து மீளாததால் கேஎல் ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஜஸ்ப்ரித் பும்ரா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ரவிச்சந்திரன் அஷ்வின் மீண்டும் ஒருநாள் அணியில் எடுக்கப்பட்டுள்ளார். ஷிகர் தவானுக்கும் மீண்டும் ஒருநாள் அணியில் இடம் கிடைத்துள்ளது.
ருதுராஜ் கெய்க்வாட், வெங்கடேஷ் ஐயர் ஆகிய வீரர்கள் ஒருநாள் அணியில் முதல் முறையாக இடம்பெற்றுள்ளனர்.
இந்திய ஒருநாள் அணி:
கேஎல் ராகுல் (கேப்டன்), ஷிகர் தவான், ருதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், வெங்கடேஷ் ஐயர், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), யுஸ்வேந்திர சாஹல், ரவிச்சந்திரன் அஷ்வின், வாஷிங்டன் சுந்தர், ஜஸ்ப்ரித் பும்ரா (துணை கேப்டன்), புவனேஷ்வர் குமார், தீபக் சாஹர், பிரசித் கிருஷ்ணா, ஷர்துல் தாகூர், முகமது சிராஜ்.
தென்னாப்பிரிக்க தொடருக்கு அடுத்து நடக்கவுள்ள வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இலங்கைக்கு எதிரான தொடர்களுக்கு ரோஹித் சர்மா வந்துவிடுவார் என்பதால் ரோஹித் சர்மா கேப்டன்சி செய்வார். துணை கேப்டனாக கேஎல் ராகுல் செயல்படுவார்.
இதற்கிடையே தென்னாப்பிரிக்கா தொடரில் ரோஹித் சர்மா ஆடாததால் கேஎல் ராகுல் கேப்டன்சி செய்வதால், பும்ரா தற்காலிக துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் ஆகிய வீரர்கள் அணியில் இருக்கையில், பும்ரா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டிருப்பது வியப்பாக இருப்பதாக முன்னாள் வீரர் சபா கரீம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள சபா கரீம், பும்ராவை துணை கேப்டனாக நியமித்தது எனக்கு வியப்பாக இருக்கிறது. ரிஷப் பண்ட் அனைத்துவிதமான போட்டிகளிலும் ஆடுகிறார். எனவே அவரையே துணை கேப்டனாக நியமித்திருக்கலாம். டெல்லி கேபிடள்ஸ் அணியை கேப்டனாக இருந்து பண்ட் வழிநடத்தியிருக்கிறார். கேப்டன்சியில் சிறப்பாகவும் செயல்பட்டிருக்கிறார். எனவே கேப்டன்சி அனுபவம் ரிஷப் பண்ட்டையே துணை கேப்டனாக நியமித்திருக்கலாம். பும்ரா திறமையானவர். இந்திய அணியின் முக்கியமான வீரர். ஆனால் கேப்டன்சி அனுபவமே இல்லாத பும்ராவை துணை கேப்டனாக நியமித்திருப்பது வியப்பாக உள்ளது. ரிஷப் பண்ட்டைத்தான் துணை கேப்டனாக நியமித்திருக்க வேண்டும் என்று சபா கரீம் தெரிவித்துள்ளார்.
ரோஹித் சர்மா வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இலங்கை தொடர்களுக்கு வந்துவிடுவார். எனவே மீண்டும் ராகுல் துணை கேப்டனாகிவிடுவார். இந்த தொடரில் ரோஹித் ஆடாததால் ராகுல் கேப்டன்சி செய்கிறார். 3 விதமான போட்டிகளிலும் தொடர்ச்சியாக சிறப்பாக ஆடிவரும் பும்ராவின் பங்களிப்பு மற்றும் அவரது கிரிக்கெட் மூளை ஆகிய இரண்டுக்குமான பரிசாக பும்ராவை துணை கேப்டனாக நியமிக்க தேர்வாளர்கள் முடிவு செய்ததாக பிசிசிஐ தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதனால் தான் ரிஷப் பண்ட், ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் அணியில் இருந்தபோதும், அவர்களைவிட பும்ராவிற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டிருக்கிறது.
