வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவனை தேர்வு செய்துள்ளார் முன்னாள் வீரரும் முன்னாள் தேர்வாளருமான சபா கரீம். 

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஒருநாள் போட்டி வரும் 6ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடக்கவுள்ளது.

இந்த தொடர் தான் ரோஹித் சர்மாவின் முழு நேர கேப்டன்சியில் இந்திய அணி ஆடும் முதல் தொடர். முதல் ஒருநாள் போட்டி வரும் 6ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், இந்திய வீரர்கள் ஷிகர் தவான், ஷ்ரேயாஸ் ஐயர், ருதுராஜ் கெய்க்வாட், நவ்தீப் சைனி ஆகிய வீரர்களுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. 

ஷிகர் தவான், ருதுராஜ் கெய்க்வாட் ஆகிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு கொரோனா உறுதியான நிலையில், மற்றொரு டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான ராகுல் அவரது தங்கச்சி திருமணத்திற்காக சென்றிருப்பதால், முதல் போட்டியில் ஆடமாட்டார். எனவே மயன்க் அகர்வால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ரோஹித் சர்மாவுடன் இஷான் கிஷன், மயன்க் அகர்வால் ஆகிய இருவரில் ஒருவர் தொடக்க வீரராக இறங்குவார். இந்நிலையில், முதல் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவன் காம்பினேஷனை தேர்வு செய்துள்ளார் முன்னாள் வீரரும் முன்னாள் தேர்வாளருமான சபா கரீம்.

கேப்டன் ரோஹித் சர்மாவுடன் இஷான் கிஷனை தொடக்க வீரராக தேர்வு செய்துள்ளார் சபா கரீம். 3ம் வரிசையில் விராட் கோலி நிரந்தர பேட்ஸ்மேன். 4ம் வரிசையில் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டையும், 5ம் வரிசையில் சூர்யகுமார் யாதவையும் தேர்வு செய்துள்ள சபா கரீம், 6ம் வரிசையில் ஃபினிஷராக தீபக் ஹூடாவை தேர்வு செய்துள்ளார். ஷ்ரேயாஸ் ஐயருக்கு கொரோனா என்பதால் அவரை தேர்வு செய்யவில்லை.

அதன்பின்னர் ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டர்களாக ஷர்துல் தாகூர் மற்றும் தீபக் சாஹர் ஆகிய இருவரையும், ஃபாஸ்ட் பவுலராக முகமது சிராஜையும், ஸ்பின்னர்களாக குல்தீப் - சாஹலையும் தேர்வு செய்துள்ளார் சபா கரீம்.

சபா கரீம் தேர்வு செய்துள்ள இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், விராட் கோலி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ஷர்துல் தாகூர், தீபக் சாஹர், முகமது சிராஜ், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல்.