India vs Sri Lanka: இளம் வீரருக்கு நேர்ந்த சோகம்.. டி20 தொடரிலிருந்து விலகல்..! மாற்று வீரர் அறிவிப்பு
இலங்கைக்கு எதிரான டி20 தொடரிலிருந்து டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக விலகியுள்ளார். அவருக்கு மாற்றுவீரராக மயன்க் அகர்வால் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்தியா - இலங்கை இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விராட் கோலி மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய இருவருக்கும் ஓய்வளிக்கப்பட்டது. கேஎல் ராகுல், சூர்யகுமார் யாதவ், தீபக் சாஹர் ஆகிய மூவரும் காயம் காரணமாக இந்த தொடரிலிருந்து விலகினர்.
எனவே இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு இந்திய அணியின் ஆடும்லெவனில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் லக்னோவில் நடந்த முதல் போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் ஆடவில்லை. அவரது மணிக்கட்டில் காயம் அடைந்ததால் தான் அவர் அணியில் இடம்பெறவில்லை என்று கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்திருந்தார்.
முதல் டி20 போட்டியில் ரோஹித்துடன் இஷான் கிஷன் தொடக்க வீரராக இறங்கினார். இஷான் கிஷன் அபாரமாக பேட்டிங் ஆடி 89 ரன்களை குவித்தார். ஷ்ரேயாஸ் ஐயரும் அதிரடியாக விளையாடி 57 ரன்கள் அடித்தார். 199 ரன்களை குவித்த இந்திய அணி, இலங்கையை 137 ரன்களுக்கு சுருட்டி 62 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
2வது டி20 போட்டி இன்று தர்மசாலாவில் நடக்கிறது. இந்நிலையில், மணிக்கட்டு காயம் சரியாகாததால், இந்த டி20 தொடரிலிருந்து விலகியுள்ளார் ருதுராஜ் கெய்க்வாட். ருதுராஜுக்கு மாற்று வீரராக மயன்க் அகர்வால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால் மயன்க் அகர்வாலுக்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்க வாய்ப்பில்லை.