#INDvsENG 2வது டெஸ்ட்: ரோஹித் சர்மா அதிரடி சதம்.. ரஹானே சிறப்பான பேட்டிங்..!
இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா அதிரடியாக ஆடி சதமடித்துள்ளார்.
இந்தியா இங்கிலாந்து இடையேயான 2வது டெஸ்ட் போட்டி சென்னையில் இன்று தொடங்கி நடந்துவருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணி இந்த போட்டியில் 3 அதிரடி மாற்றங்களுடன் களமிறங்கியது. பும்ராவுக்கு பதிலாக சிராஜ், நதீமுக்கு பதிலாக குல்தீப் யாதவ் மற்றும் சுந்தருக்கு பதிலாக அக்ஸர் படேல் ஆகியோரை இறக்கியது.
இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் ஆகிய இருவரும் களமிறங்கினர். ஷுப்மன் கில் 2வது ஒவரிலேயே ரன்னே அடிக்காமல் டக் அவுட்டானார். அதன்பின்னர் ரோஹித் சர்மாவுடன் ஜோடி சேர்ந்த புஜாரா நிதானமாக ஆட, ரோஹித் தனது வழக்கமான பாணியில் அடித்து ஆடி, பந்துக்கு நிகராக ரன் அடித்தார்.
புஜாரா 21 ரன்னில் லீச்சின் சுழலில் விழ, மொயின் அலியின் சுழலில் கேப்டன் விராட் கோலி ரன்னே அடிக்காமல் க்ளீன் போல்டானார். அதன்பின்னர் ரோஹித்துடன் ஜோடி சேர்ந்த ரஹானே, சிறப்பாக ஆடிவருகிறார். ரோஹித் தொடர்ச்சியாக தனது இயல்பான அதிரடி பேட்டிங்கை தொடர்ந்து சதமடித்தார். உணவு இடைவேளைக்கு பின், 2வது செசனில் ரோஹித் சதமடிக்க, ரஹானே அரைசதத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறார். ரோஹித்தும் ரஹானேவும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து மிகச்சிறப்பாக ஆடிவருகின்றனர். இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்துள்ள நிலையில், 200 ரன்களை நெருங்கிவிட்டது. ரோஹித்தும் ரஹானேவும் பார்ட்னர்ஷிப்பை தொடரும் பட்சத்தில், இந்திய அணி பெரிய ஸ்கோர் அடிப்பது உறுதி.