Asianet News TamilAsianet News Tamil

IND vs AUS: இந்திய அணியின் தோல்விக்கு அவங்கதான் காரணம்.! கேப்டன் ரோஹித் சர்மா கடும் தாக்கு

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி தோற்றதற்கு பவுலிங் சரியில்லாததுதான் காரணம் என்று கேப்டன் ரோஹித் சர்மா கூறினார்.
 

rohit sharma reveals the reason for team india defeat against australia in first t20
Author
First Published Sep 21, 2022, 5:26 PM IST

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி நேற்று மொஹாலியில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஃபின்ச் ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, இந்திய அணி 20 ஓவரில் 208 ரன்களை குவித்தது.

கேஎல் ராகுலின் அதிரடி அரைசதம் (35 பந்தில் 55 ரன்கள்) மற்றும் ஹர்திக் பாண்டியாவின் காட்டடி அரைசதத்தால் (30 பந்தில் 71 ரன்கள்) 20 ஓவரில் 208 ரன்களை குவித்தது இந்திய அணி.

ஆனாலும் 209 ரன்கள் என்ற கடின இலக்கை கட்டுப்படுத்த முடியாமல் தோற்றது இந்திய அணி. ஆஸ்திரேலிய அணி, கேமரூன் க்ரீனின் அதிரடி அரைசதம் (30 பந்தில் 61 ரன்கள்) மற்றும் மேத்யூ வேடின் அதிரடியான ஃபினிஷிங்கால்(21 பந்தில் 45 ரன்கள்) கடைசி ஓவரின் 2வது பந்தில் இலக்கை அடித்து ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.

இதையும் படிங்க - நான் தான் ஓபனர்.. விமர்சனங்களுக்கும் விவாதங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்த கேஎல் ராகுல்

208 ரன்களை குவித்தும் இந்திய அணி தோல்வியை தழுவியது, இந்திய அணிக்கும் ரசிகர்களுக்கும் முன்னாள் வீரர்களுக்குமே அதிருப்திதான். இந்த போட்டியில் இந்திய அணியின் முன்னணி பவுலர்களான புவனேஷ்வர் குமார் மற்றும் ஹர்ஷல் படேல் ஆகிய இருவரும் இணைந்து 8 ஓவரில் 101 ரன்களை வாரி வழங்கினர். டி20 உலக கோப்பையில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் புவனேஷ்வர் குமார் மற்றும் ஹர்ஷல் படேல் ஆகிய இருவரும் ஒரு விக்கெட் கூட வீழ்த்தாமல், இருவரும் இணைந்து 8 ஓவரில் 101 ரன்களை வழங்கியது இந்திய அணிக்கு பின்னடைவாகவும் கவலையளிக்கும் விஷயமாகவும் அமைந்தது.

மேலும் இந்திய அணியின் ஃபீல்டிங் படுமோசமாக இருந்தது. மொத்தமாக 3 கேட்ச்களை தவறவிட்டனர். ஆட்டத்தை இந்தியாவிடம் இருந்து தட்டிப்பறித்த கேமரூன் க்ரீன் 42 ரன்களுடன் களத்தில் இருந்தபோது ஹர்திக் பாண்டியா வீசிய 8வது ஓவரின் 3வது பந்தில் கொடுத்த கேட்ச் வாய்ப்பை டீப் மிட் விக்கெட் திசையில் நின்ற அக்ஸர் படேல் தவறவிட்டார். அதன்பின்னர் 19 ரன்களை க்ரீன் கூடுதலாக விளாசியுடன், ஸ்மித்துடனான அவரது பார்ட்னர்ஷிப்பும் நீண்டது.

அதற்கடுத்த ஓவரிலேயே அக்ஸர் படேலின் பவுலிங்கில் ஸ்டீவ் ஸ்மித் கொடுத்த கேட்ச்சை கேஎல் ராகுல் லாங் ஆஃப் திசையில் தவறவிட்டார். இப்படியாக இந்திய வீரர்கள் ஃபீல்டிங்கில் படுமோசமாக சொதப்ப, 208 ரன்கள் அடித்தும் கூட கடைசியில் தோற்க நேரிட்டது.

இதையும் படிங்க - 18 பந்தில் 49 ரன்கள்.. இந்திய அணியின் பெரிய பிரச்னையே அவர் தான்..! சீனியர் வீரரை பற்றி கவலைப்படும் கவாஸ்கர்

போட்டிக்கு பின் பேசிய இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா,  நாங்கள் சரியாக பந்துவீசவில்லை. 200 ரன்கள் என்பது சிறந்த ஸ்கோர். அது கட்டுப்படுத்தியிருக்க வேண்டிய ஸ்கோர். பவுலிங் சரியாக வீசாததுடன் ஃபீல்டிங்கும் சரியாக செய்யவில்லை. மேத்யூ வேட் - டிம் டேவிட் ஜோடி 32 பந்தில் 60க்கும் அதிகமான ரன்களை குவித்துவிட்டது. அந்த ஒரு விக்கெட்டை வீழ்த்தியிருக்க வேண்டும். அது முடியாமல் போய்விட்டது. நாங்கள் செய்த தவறை அடுத்த போட்டிகளில் தவிர்ப்பதற்கு இது பாடமாக அமையும் என்று ரோஹித் தெரிவித்தார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios