சர்வதேச கிரிக்கெட்டில் தொடக்க வீரராக ரோஹித் சர்மா அபார சாதனை..! சச்சினுக்கு அடுத்த இடத்தை பிடித்து அசத்தல்
சர்வதேச கிரிக்கெட்டில் தொடக்க வீரராக 11000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார் ரோஹித் சர்மா.
இந்திய அணியின் சிறந்த தொடக்க வீரர்களில் ஒருவராக தன்னை நிலைநிறுத்தி கொண்டுள்ளார் ரோஹித் சர்மா. 2013ம் ஆண்டிலிருந்து சர்வதேச கிரிக்கெட்டில் ஓபனிங்கில் ஆடிவரும் ரோஹித் சர்மா, அந்த வாய்ப்பை மிகச்சிறப்பாக பயன்படுத்தி ஒருநாள் கிரிக்கெட்டில் 3 இரட்டை சதங்களை விளாசியுள்ளார். டி20 கிரிக்கெட்டிலும் 4 சதங்கள் அடித்துள்ளார்.
ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மிடில் ஆர்டரில் சொதப்பிய ரோஹித், ஓபனிங் செய்ய வாய்ப்பு கிடைத்த பிறகு, அந்த வாய்ப்பை பயன்படுத்தி எப்படி சாதித்து காட்டினாரோ, அதேபோல டெஸ்ட் கிரிக்கெட்டிலும் ஓபனிங்கில் ஆட கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி தனது திறமையை நிரூபித்து டெஸ்ட் அணியிலும் நிரந்தர தொடக்க வீரராக உருவெடுத்தார்.
இங்கிலாந்துக்கு எதிராக நடந்துவரும் டெஸ்ட் தொடரில் சவாலான இங்கிலாந்து கண்டிஷனில் சிறப்பாக ஆடிவரும் ரோஹித் சர்மா, சர்வதேச கிரிக்கெட்டில் தொடக்க வீரராக 11000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 11000 ரன்களை எட்டிய தொடக்க வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்து 2ம் இடத்தில் உள்ளார் ரோஹித் சர்மா. சச்சின் டெண்டுல்கர் 241 இன்னிங்ஸ்களில் 11000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டிய நிலையில், ரோஹித் சர்மா 246 இன்னிங்ஸ்களில் 11000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார்.
தொடக்க வீரராக அதிக ரன்களை குவித்த வீரராக இலங்கையின் ஜெயசூரியா(19,298 ரன்கள்) திகழ்கிறார்.