ரோஹித் சர்மா தான் உலகின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்..! இந்திய முன்னாள் வீரர் அதிரடி
ரோஹித் சர்மா தான் உலகின் சிறந்த பேட்ஸ்மேன் என்று இந்திய முன்னாள் வீரர் ரிதீந்தர் சோதி தெரிவித்துள்ளார்.
விராட் கோலி, கேன் வில்லியம்சன், ஸ்டீவ் ஸ்மித், ஜோ ரூட் ஆகியோர் தான் சமகாலத்தின் சிறந்த பேட்ஸ்மேன்கள் என்று மதிப்பிடப்படுகின்றனர்.
ஒருநாள் கிரிக்கெட்டில் 3 இரட்டை சதங்கள், டெஸ்ட் கிரிக்கெட்டில் இரட்டை சதம் மற்றும் சதங்கள் விளாசி நல்ல தொடக்க வீரராக தன்னை நிலைநிறுத்திவிட்ட போதிலும், ரோஹித் சர்மா, கோலி அளவிற்கு மதிப்பிடப்படுவதில்லை. கோலி தான் சிறந்த வீரராக மதிப்பிடப்படுகிறார்.
ஆனால் இந்திய அணியின் முன்னாள் வீரர் ரிதீந்தர் சோதி, ரோஹித் சர்மா தான் உலகின் சிறந்த பேட்ஸ்மேன் என்று கூறியுள்ளார். இந்திய அணி இங்கிலாந்தில் இங்கிலாந்துக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவுள்ள நிலையில், அந்த தொடர் குறித்து பேசிய ரிதீந்தர் சோதி, இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா, விராட் கோலி, புஜாரா ஆகிய 3 பேட்ஸ்மேன்களைத்தான் அதிகமாக சார்ந்திருக்கிறது. பேட்டிங் நேர்த்தியை பொறுத்தமட்டில் ரோஹித் சர்மா தான் உலகின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்.
ஆரம்பத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோஹித் திணறினாலும், தொடக்க வீரராக சிறப்பாக ஆடி தனக்கான இடத்தை பிடித்துவிட்டார். ஓபனிங்கில் அவர் மிகவும் ஸ்பெஷலான வீரர். எதிரணியிடமிருந்து மேட்ச்சை பறித்துவிடக்கூடிய திறன் பெற்றவர் என்று ரிதீந்தர் சோதி தெரிவித்துள்ளார்.