#SRHvsRCB 4 வருஷத்துக்கு பிறகு அரைசதம் அடித்த மேக்ஸ்வெல்..! சன்ரைசர்ஸுக்கு சவாலான இலக்கை நிர்ணயித்த ஆர்சிபி
க்ளென் மேக்ஸ்வெல்லின் அதிரடி அரைசதத்தால் ஓரளவிற்கு நல்ல ஸ்கோரை அடித்து, சன்ரைசர்ஸூக்கு சவாலான இலக்கை நிர்ணயித்துள்ளது ஆர்சிபி.
ஐபிஎல் 14வது சீசனின் இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ஆர்சிபி அணிகள் ஆடிவருகின்றன. சென்னையில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் கேப்டன் டேவிட் வார்னர் ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, ஆர்சிபி அணி முதலில் பேட்டிங் ஆடியது.
ஆர்சிபி அணியின் தொடக்க வீரர்களாக கோலியும் தேவ்தத் படிக்கல்லும் களமிறங்கினர். படிக்கல் 11 ரன்னில் ஆட்டமிழக்க, 3ம் வரிசையில் களத்திற்கு வந்த ஷபாஸ் அகமது 14 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் கோலியுடன் ஜோடி சேர்ந்த மேக்ஸ்வெல் அடித்து ஆடி ஸ்கோர் செய்ய, இருவருக்கும் இடையே பார்ட்னர்ஷிப் வளர்ந்து வந்த வேளையில், கோலி 33 ரன்னில் ஹோல்டரின் பந்தில் ஆட்டமிழந்தார்.
அதன்பின்னர் களத்திற்கு வந்த ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் டிவில்லியர்ஸ் ஒரு ரன்னில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து வாஷிங்டன் சுந்தர்(8), கிறிஸ்டியன்(1) ஆகிய வீரர்கள் அடுத்தடுத்து ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர். கைல் ஜாமிசன் 12 ரன் அடித்தார். கோலி ஆட்டமிழந்த பின்னர், மேக்ஸ்வெல்லுக்கு பேட்டிங் ஆட அதிகமாக வாய்ப்பு கிடைக்கவில்லை.
ஆனாலும் கடைசி ஓவரில் அரைசதத்தை எட்டி, ஆர்சிபி அணி 149 ரன்களை எட்ட உதவினார் மேக்ஸ்வெல். 2016 ஐபிஎல்லுக்கு பிறகு இந்த சீசனில் தான் மேக்ஸ்வெல் அரைசதம் அடித்துள்ளார். 4 ஆண்டுகளுக்கு பிறகு ஐபிஎல்லில் மேக்ஸ்வெல் அரைசதம் அடித்தார். 150 ரன்கள் என்பது எளிதான இலக்குதான் என்றாலும், சென்னை ஆடுகளத்தில் சவாலான இலக்கே. சன்ரைசர்ஸ் அணி அந்த இலக்கை விரட்டிவருகிறது.