டெல்லி கேபிடள்ஸுக்கு எதிரான போட்டியில் 16 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி அணி அபார வெற்றி பெற்றது அணி.
ஐபிஎல் 15வது சீசனின் இன்றைய போட்டியில் டெல்லி கேபிடள்ஸும் ஆர்சிபியும் மோதின. மும்பை வான்கடேவில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடள்ஸ் கேப்டன் ரிஷப் பண்ட் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
டெல்லி கேபிடள்ஸ் அணி:
பிரித்வி ஷா, டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ரிஷப் பண்ட் (கேப்டன், விக்கெட் கீப்பர்), ரோவ்மன் பவல், லலித் யாதவ், அக்ஸர் படேல், ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ், முஸ்தாஃபிசுர் ரஹ்மான், கலீல் அகமது.
ஆர்சிபி அணி:
ஃபாஃப் டுப்ளெசிஸ் (கேப்டன்), அனுஜ் ராவத், விராட் கோலி, க்ளென் மேக்ஸ்வெல், ஷபாஸ் அகமது, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), சுயாஷ் பிரபுதேசாய், வனிந்து ஹசரங்கா, ஹர்ஷல் படேல், ஜோஷ் ஹேசில்வுட், முகமது சிராஜ்.
முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணியின் தொடக்க வீரர்கள் அனுஜ் ராவத் (0) மற்றும் டுப்ளெசிஸ் (8) ஆகிய இருவருமே ஏமாற்றமளித்தனர். கோலி 12 ரன்னில் ரன் அவுட்டானார். பிரபுதேசாய் 6 ரன்னில் ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடிய மேக்ஸ்வெல் அரைசதம் அடித்தார். ஆனால் அவரும் அதன்பின்னர் பெரிய இன்னிங்ஸ் ஆடாமல் 55 ரன்னில் ஆட்டமிழக்க, 11.2 ஓவரில் 92 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது ஆர்சிபி அணி.
அதன்பின்னர் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த தினேஷ் கார்த்திக், 34 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 66 ரன்களை குவித்தார். குறிப்பாக சிராஜ் வீசிய 18வது ஓவரை பொளந்துகட்டினார் தினேஷ் கார்த்திக். அந்த ஓவரில் 2 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 28 ரன்களை குவித்தார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஆடிய ஷபாஸ் அகமது 21 பந்தில் 32 ரன்கள் அடிக்க, 20 ஓவரில் 189 ரன்கள் அடித்த ஆர்சிபி அணி 190 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
190 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய டெல்லி கேபிடள்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் வார்னர் மற்றும் பிரித்வி ஷா ஆகிய இருவரும் அதிரடியாக தொடங்கினர். பிரித்வி ஷா 16 ரன்னில் ஆட்டமிழக்க, அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார் வார்னர்.
வார்னரும் 66 ரன்னில் ஆட்டமிழக்க,மிட்செல் மார்ஷ் 14 ரன்னிலும், ரிஷப் பண்ட் 34 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின்னர் மற்ற வீரர்களால் டெல்லி அணியை வெற்றி பெறச்செய்ய முடியவில்லை. 20 ஓவரில் 173 ரன்கள் அடித்த டெல்லி அணி 16 ரன் வித்தியாசத்தில் தோற்றது.
