#INDvsENG சவாலான கண்டிஷனில் அஷ்வின் தரமான சதம்.. இங்கிலாந்துக்கு மிகக்கடின இலக்கை நிர்ணயித்த இந்தியா
இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்ஸில் ஸ்பின்னிற்கு சாதகமான சவாலான ஆடுகளத்தில் மிகச்சிறப்பாக ஆடி அஷ்வின் சதமடிக்க, மிகக்கடினமான இலக்கை இங்கிலாந்துக்கு நிர்ணயித்துள்ளது இந்திய அணி.
இந்தியா இங்கிலாந்து இடையே சென்னையில் நடந்துவரும் முதல் டெஸ்ட்டில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, ரோஹித் சர்மாவின் அதிரடி சதம்(161), ரஹானே(67) மற்றும் ரிஷப் பண்ட்(58) ஆகியோரின் அரைசதம் ஆகியவற்றால் முதல் இன்னிங்ஸில் 329 ரன்களை குவித்தது.
2ம் நாளான இன்றைய ஆட்டத்தின் முதல் செசனில் இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் முடிய, முதல் செசனிலேயே முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி, உணவு இடைவேளைக்கு முன்பாகவே 39 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. உணவு இடைவேளை முடிந்து 2வது செசனை தொடங்கிய சில நிமிடங்களில் ஸ்டோக்ஸ் 18 ரன்னில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து போப், லீச், ஸ்டோன், பிராட் ஆகியோர் ஆட்டமிழக்க, 2ம் நாளான இன்றைய ஆட்டத்தின் 3வது செசனில் 134 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் சுருண்டது. இந்திய அணியின் சார்பில் அஷ்வின் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அக்ஸர் படேல் மற்றும் இஷாந்த் சர்மா ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
195 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் ஷுப்மன் கில் 14 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ரோஹித் சர்மா 25 ரன்களுடனும் புஜாரா 7 ரன்களுடனும் களத்தில் இருந்த நிலையில் 2ம் நாள் ஆட்டம் முடிந்தது. 2ம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 2வது இன்னிங்ஸில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 54 ரன்கள் அடித்திருந்தது.
3ம் நாளான இன்றைய ஆட்டத்தை ரோஹித்தும் புஜாராவும் தொடர்ந்தனர். புஜாரா 14 ரன்னில் ரன் அவுட்டாக, ரோஹித் 26 ரன்னிலும் ரிஷப் பண்ட் 8 ரன்னிலும் ரஹானே 10 ரன்னிலும் அக்ஸர் படேல் 7 ரன்னிலும் ஆட்டமிழக்க, ஒருமுனையில் கோலி மட்டும் நிலைத்து நின்றார். 106 ரன்களுக்கே இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்துவிட, அதன்பின்னர் கோலியும் அஷ்வினும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து மிகச்சிறப்பாக ஆடினர். 7வது விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 96 ரன்கள் அடித்தனர். இருவருமே அரைசதம் அடித்த நிலையில், 62 ரன்னில் கோலி ஆ ட்டமிழக்க, அதன்பின்னர் குல்தீப், இஷாந்த் சர்மா ஆகியோர் ஒருமுனையில் ஆட்டமிழக்க, மறுமுனையில் அதிரடியாக ஆடி சதமடித்த அஷ்வின், 106 ரன்கள் அடித்து கடைசி விக்கெட்டாக ஆட்டமிழக்க, இந்திய அணி 2வது இன்னிங்ஸில் 286 ரன்கள் அடித்து, 482 ரன்கள் என்ற மிகக்கடின இலக்கை இங்கிலாந்துக்கு நிர்ணயித்துள்ளது.
ஆடுகளம் முழுக்க முழுக்க ஸ்பின்னிற்கு சாதகமாக இருந்ததால், ரோஹித், ரஹானே ஆகிய முன்னணி பேட்ஸ்மேன்களே விரைவில் ஆட்டமிழந்த போதிலும், அஷ்வின் அதிரடியாக ஆடி 148 பந்தில் 106 ரன்களை அடித்தார். 482 ரன்கள் என்ற இலக்கை இங்கிலாந்து அடிப்பது மிக மிகக்கடினம்.