பெஷாவர் ஸால்மி அணிக்கு எதிரான போட்டியில் அபாரமாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி லாகூர் அணியின் வெற்றிக்கு மீண்டும் உதவினார் ரஷீத் கான்.  

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் மார்ச் மாதத்தில் கொரோனா காரணமாக தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 9ம் தேதி முதல் மீண்டும் நடத்தப்பட்டுவருகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்கு எதிரான போட்டியில் அபாரமாக பந்துவீசி 4 ஓவரில் 9 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 1 ஒரு விக்கெட்டை வீழ்த்திய ரஷீத் கான், பேட்டிங்கிலும் கடைசி ஓவரில் காட்டடி அடித்து 5 பந்தில் 15 ரன்களை விளாசி லாகூர் காலண்டர்ஸ் அணியை வெற்றி பெற வைத்தார்.

நேற்று பெஷாவர் ஸால்மி அணிக்கு எதிராக நடந்த போட்டியிலும் ரஷீத் கான் அபாரமாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய லாகூர் அணி 20 ஓவரில் 170 ரன்கள் அடித்தது. லாகூர் அணியில் டிம் டேவிட் அதிகபட்சமாக 64 ரன்களும், கேப்டன் பென் டன்க் 48 ரன்களும் அடித்தனர்.

171 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய பெஷாவர் அணியின் சீனியர் வீரர் ஷோயப் மாலிக் அபாரமாக ஆடி 73 ரன்களை குவித்தார். அவரை ஹாரிஸ் ராஃப் வீழ்த்த, அதன்பின்னர் தனது விக்கெட் வேட்டையை தொடங்கிய ரஷீத் கான், டேவிட் மில்லர்(21), ரோவ்மன் பவல்(0), ரூதர்ஃபோர்டு(16), ஃபேபியன் ஆலன்(0), வஹாப் ரியாஸ்(17) ஆகிய 5 வீரர்களையும் வீழ்த்த பெஷாவர் அணி 20 ஓவரில் 160 ரன்கள் மட்டுமே அடித்தது. இதையடுத்து 10 ரன் வித்தியாசத்தில் லாகூர் அணி வெற்றி பெற்றது.

அபாரமாக பந்துவீசிய ரஷீத் கான், 4 ஓவரில் 20 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி லாகூர் அணியின் வெற்றிக்கு காரணமாக திகழ்ந்து, ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.