வருண் சக்கரவர்த்தியின் பவுலிங் எளிதாக கணிக்கும் வகையில் இருப்பதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் ரமீஸ் ராஜா கருத்து கூறியுள்ளார். 

தமிழகத்தை சேர்ந்த ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி, ஐபிஎல் 13வது சீசனில்(2019 ஐபிஎல்) கேகேஆர் அணிக்காக அபாரமாக பந்துவீசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். ஐபிஎல்லில் சிறப்பாக பந்துவீசியதன் விளைவாக, ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்துக்கான டி20 அணியில் வருண் சக்கரவர்த்தி இடம்பெற்றார். ஆனால் காயம் காரணமாக அவர் அந்த தொடரில் ஆடமுடியாமல் போனது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

காயத்திலிருந்து மீண்ட வருண் சக்கரவர்த்தி, அடுத்ததாக இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்தார். ஆனால் யோ யோ ஃபிட்னெஸ் டெஸ்ட்டில் தேறாததால், அந்த தொடரிலிருந்து நீக்கப்பட்டார்.

இதையடுத்து 3வது முறையாக இலங்கை சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணியில் இடம்பெற்று இலங்கை சென்றுள்ள வருண் சக்கரவர்த்திக்கு, 3 டி20 போட்டிகளிலும் ஆட வாய்ப்பு கிடைத்தது. ஆனால் ஸ்பின்னிற்கு சாதகமான கொழும்பு ஆடுகளத்தில் வருண் சக்கரவர்த்தி பெரியளவில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

மாயாஜால ஸ்பின்னராக ஒருசிலரால் பார்க்கப்படும் வருண் சக்கரவர்த்தி, இலங்கைக்கு எதிரான 3 டி20 போட்டிகளிலும் சேர்த்தே மொத்தமாக வெறும் 2 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தினார். ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஸ்பெல்லை வருண் சக்கரவர்த்தி வீசவில்லை.

இந்நிலையில், வருண் சக்கரவர்த்தி குறித்து பேசியுள்ள பாகிஸ்தான் முன்னாள் வீரர் ரமீஸ் ராஜா, வருண் சக்கரவர்த்தி இன்னும் வெரைட்டியாக வீச வேண்டும். ஒரே மாதிரியான வேகத்தில் அவர் வீசுகிறார். அந்த குறிப்பிட்ட பிட்ச்சில் பந்தை தூக்கிப்போட வேண்டும். சில நேரங்களில் வேகமாக போடவேண்டும். ஆனால் ஒரே வேகத்தில் வீசும் வருண் சக்கரவர்த்தியின் பவுலிங், எளிதாக கணிக்கும் வகையில் உள்ளது என்று ரமீஸ் ராஜா தெரிவித்தார்.