#SLvsIND ராகுல் டிராவிட்டை கவர்ந்த இலங்கை வீரர்..!
இலங்கை அணியின் ஃபாஸ்ட் பவுலர் துஷ்மந்தா சமீரா தன்னை வெகுவாக கவர்ந்ததாக ராகுல் டிராவிட் தெரிவித்திருக்கிறார்.
இளம் திறமைகளை அடையாளம் கண்டு அவர்களை வளர்த்தெடுப்பதில் ராகுல் டிராவிட்டுக்கு நிகர் ராகுல் டிராவிட்டே. இந்திய அண்டர் 19 மற்றும் இந்தியா ஏ அணிகளின் பயிற்சியாளராக இருந்து இந்திய அணிக்காக பல இளம் திறமைசாலிகளை மெருகேற்றி முழுமையான வீரர்களாக உருவாக்கி கொடுத்திருக்கிறார்.
ராகுல் டிராவிட்டின் பயிற்சியில் வளர்ந்த பிரித்வி ஷா, இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், தீபக் சாஹர் உள்ளிட்ட வீரர்கள் அடங்கிய இந்திய அணி தான் இலங்கையில் அவரது பயிற்சியில் மீண்டும் ஆடிவருகிறது.
இலங்கைக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை வென்றுவிட்டது. கடைசி போட்டி வரும் 23ம் தேதி நடக்கவுள்ளது. சொந்த மண்ணில் இந்திய அணியிடம் 2 போட்டிகளிலும் தோற்று ஒருநாள் தொடரை இழந்த இலங்கை அணி, கடைசி போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் உள்ளது.
இலங்கை அணி தோற்றிருந்தாலும், அந்த அணியின் வலது கை ஃபாஸ்ட் பவுலர் துஷ்மந்தா சமீரா, இளம் வீரர்களை அடையாளம் காணும் லெஜண்ட் ராகுல் டிராவிட்டின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
இலங்கை அணியின் பயிற்சியாளர்களிடம் துஷ்மந்தா சமீரா சிறப்பாக பந்துவீசி தன்னை கவர்ந்ததாக ராகுல் டிராவிட் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்வளவுக்கும் அந்த சமீரா, 2வது ஒருநாள் போட்டியில் விக்கெட்டே வீழ்த்தவில்லை. அவர் விக்கெட் வீழ்த்தவில்லை என்றாலும், அவரது பவுலிங் திறமை ராகுல் டிராவிட்டை கவர்ந்துள்ளது.