செமயா பண்றீங்க தம்பி.. இலங்கை கேப்டனை மனதார பாராட்டிய ராகுல் டிராவிட்
இந்தியா - இலங்கை இடையேயான 3வது ஒருநாள் போட்டியின் இடையே இலங்கை கேப்டன் தசுன் ஷனாகாவுடன் இந்திய அணி பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பேசிய புகைப்படம் செம வைரலான நிலையில், அவர் என்ன பேசினார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.
இளம் திறமைகளை அடையாளம் கண்டு அவர்களை வளர்த்தெடுப்பதில் ராகுல் டிராவிட்டுக்கு நிகர் ராகுல் டிராவிட்டே. இந்தியா அண்டர் 19 மற்றும் இந்தியா ஏ அணிகளின் பயிற்சியாளராக இருந்து, பல இளம் திறமைசாலிகளை மெருகேற்றி இந்திய அணிக்கு கொடுத்த ராகுல் டிராவிட், இலங்கை சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட்டுவருகிறார்.
விராட் கோலி தலைமையிலான இந்திய மெயின் அணி இங்கிலாந்தில் இருப்பதால், இலங்கை சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் செயல்பட்டுவருகிறார். ராகுல் டிராவிட்டின் பயிற்சியின் கீழ் இந்திய அணி ஆடிய முதல் ஒருநாள் தொடரை 2-1 என வென்று அசத்தியது.
லெஜண்ட் கிரிக்கெட்டரான ராகுல் டிராவிட், அவரது திறமையான பேட்டிங்கை விட, அவரது பண்புகளால் அனைவரது மனதையும் வென்றவர். அவர் ஆடிய காலத்தில் ஒரு இன்னிங்ஸை கூட சுயநலமாக ஆடாமல் அனைவரது அபிப்ராயத்தையும் பெற்ற ராகுல் டிராவிட், பயிற்சியாளராக இருக்கும்போதும் தனது செயல்பாட்டால் ஈர்க்கிறார்.
இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்தாலும், கடைசி ஒருநாள் போட்டிக்கு இடையே இலங்கை கேப்டன் தசுன் ஷனாகாவை அழைத்து ராகுல் டிராவிட் பேசிய சம்பவம், கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்தியா - இலங்கை இடையேயான 3வது ஒருநாள் போட்டியில் மழை குறுக்கிட்டபோது, களத்திற்கு சென்ற ராகுல் டிராவிட், இலங்கை கேப்டன் தசுன் ஷனாகாவுடன் பேசினார். அந்த புகைப்படம் செம வைரலானது. ராகுல் டிராவிட்டை ரசிகர்கள் பலரும் வெகுவாக புகழ்ந்தனர்.
ஷனாகாவுடன் ராகுல் டிராவிட் என்ன பேசினார் என்பது குறித்து யூகங்கள் பரவின. இந்நிலையில், உண்மையாகவே ராகுல் டிராவிட் என்ன பேசினார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ஷனாகா இலங்கை அணியை சிறப்பாக வழிநடத்திவருவதாக, ஷனாகாவின் கேப்டன்சியை பாராட்டிய ராகுல் டிராவிட், இலங்கை அணியின் செயல்பாட்டையும், அந்த அணி வளர்ச்சியையும் வெகுவாக பாராட்டியிருக்கிறார்.