கேகேஆருக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 18.2 ஓவரில் 137 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
ஐபிஎல் 15வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. மும்பை வான்கடேவில் நடந்துவரும் இன்றைய போட்டியில் கேகேஆர் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் ஆடிவருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். 2வது இன்னிங்ஸில் பனியின் தாக்கத்தால் பந்துவீசுவது கடினம் என்பதால் டாஸ் வென்று முதலில் பந்துவீச ஷ்ரேயாஸ் தீர்மானித்ததில் ஆச்சரியமில்லை.
கேகேஆர் அணி:
அஜிங்க்யா ரஹானே, வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா, ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), சாம் பில்லிங்ஸ் (விக்கெட் கீப்பர்), ஆண்ட்ரே ரசல், சுனில் நரைன், டிம் சௌதி, உமேஷ் யாதவ், ஷிவம் மாவி, வருண் சக்கரவர்த்தி.
பஞ்சாப் கிங்ஸ் அணி:
மயன்க் அகர்வால் (கேப்டன்), ஷிகர் தவான், லியாம் லிவிங்ஸ்டோன், பானுகா ராஜபக்சா (விக்கெட் கீப்பர்), ஷாருக்கான், ஒடீன் ஸ்மித், ராஜ் பவா, அர்ஷ்தீப் சிங், ஹர்ப்ரீத் ப்ரார், ககிசோ ரபாடா, ராகுல் சாஹர்.
முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான மயன்க் அகர்வால் உமேஷ் யாதவ் வீசிய முதல் ஓவரிலேயே ஒரு ரன்னுக்கு ஆட்டமிழந்தார். 3ம் வரிசையில் இறங்கிய பானுகா ராஜபக்சா, ஷிவம் மாவி வீசிய 4வது ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் விளாசி அதே ஓவரில் ஆட்டமிழந்தார். 9 பந்தில் 31 ரன்கள் அடித்து ராஜபக்சா ஆட்டமிழந்தார். பவர்ப்ளேயின் கடைசி ஓவரில் தவான் 16 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
பவர்ப்ளேயில் 6 ஓவரில் 62 ரன்களை குவித்த பஞ்சாப் கிங்ஸ் அணி 3 விக்கெட்டுகளை இழந்தது. பஞ்சாப் அணியின் ஸ்கோர் ஆரம்பத்தில் வேகமாக உயர்ந்தாலும், விக்கெட்டுகள் தொடர்ச்சியாக சீரான இடைவெளியில் அடுத்தடுத்து விழுந்ததால், அந்த அணியால் பெரிய ஸ்கோரை அடிக்க முடியவில்லை. லியாம் லிவிங்ஸ்டோன் 19 ரன்னிலும், ராஜ் பாவா 11 ரன்னிலும், ஷாருக்கான் ரன்னே அடிக்காமலும் ஆட்டமிழந்தனர். பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட ஒடீன் ஸ்மித் 9 ரன் மட்டுமே அடித்தார். ஆனால் ககிசோ ரபாடா 16 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 25 ரன்கள் அடித்தார்.
6 ஓவரில் 62 ரன்கள் அடித்திருந்த பஞ்சாப் கிங்ஸ் அணி, 18.2 ஓவரில் 137 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 138 ரன்கள் என்பது கேகேஆருக்கு மிக எளிய இலக்கு. அந்த இலக்கை அடித்து கேகேஆர் அணி வெற்றி பெற்றுவிடும்.
