ஐசிசி டி20 தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் இங்கிலாந்தின் அதிரடி வீரர் டேவிட் மாலனை அவரது அடிப்படை விலைக்கு எடுத்து அணியின் பேட்டிங் ஆர்டருக்கு வலு சேர்த்துள்ளது பஞ்சாப் கிங்ஸ் அணி. 

ஐபிஎல் 14வது சீசனுக்கான ஏலம் சென்னையில் நடந்துவருகிறது. கிறிஸ் மோரிஸ்(ரூ.16.25 கோடி), க்ளென் மேக்ஸ்வெல்(ரூ.14.25 கோடி), ஜெய் ரிச்சர்ட்ஸன்(ரூ.14 கோடி) ஆகிய வீரர்கள் அதிக விலைக்கு விலைபோனார்கள்.

அணிகள், பிரபலமான வீரர்களுக்கு அதிகமான தொகையை கொடுத்து ஏலத்தில் எடுத்துக்கொண்டிருக்கும் நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணி வெறும் ரூ.1.50 கோடிக்கு தரமான வீரரை எடுத்துள்ளது. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்காக அபாரமாக ஆடி வெற்றிகளை பெற்று கொடுத்துவரும் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் டேவிட் மாலன். 

ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசையில் நம்பர் 1 பேட்ஸ்மேனான டேவிட் மாலன் மீது எந்த அணியுமே ஆர்வம் காட்டாத நிலையில், இடது கை அதிரடி பேட்ஸ்மேனான டேவிட் மாலனை அவரது அடிப்படை விலையான ரூ.1.5 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. பஞ்சாப் அணியின் மிகச்சிறந்த தேர்வு இது.

பஞ்சாப் அணி ரூ.14 கோடிக்கு ஆஸி., ஃபாஸ்ட் பவுலர் ஜெய் ரிச்சர்ட்ஸனை எடுத்துள்ளது. முகமது ஷமியுடன் இணைந்து மிரட்ட வெளிநாட்டு ஃபாஸ்ட் பவுலர் ஒருவர் தேவை என்ற வகையில் ஜெய் ரிச்சர்ட்ஸனை பஞ்சாப் அணி அதிகமான தொகைக்கு எடுத்துள்ளது.