India vs South Africa: மீண்டும் சொதப்பிய புஜாரா, ரஹானே..! டெஸ்ட் கெரியர் அஸ்தமனம்.. கோலி - ரிஷப் பேட்டிங்
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்ஸில் மீண்டுமொருமுறை ஒற்றை இலக்கத்தில் வெளியேறி ஏமாற்றமளித்தனர்.
இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என சமனடைந்துள்ள நிலையில், தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நடந்துவருகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, கேப்டன் விராட் கோலியின் அபாரமான பேட்டிங்கால் (79) முதல் இன்னிங்ஸில் 223 ரன்கள் அடித்தது.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய தென்னாப்பிரிக்க அணி கீகன் பீட்டர்சனின் (72) பொறுப்பான பேட்டிங்கால் 210 ரன்கள் அடித்தது. இந்திய அணி சார்பில் அபாரமாக பந்துவீசிய பும்ரா, அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
13 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடிவரும் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் மயன்க் அகர்வால் (7) மற்றும் கேஎல் ராகுல் (10) ஆகிய இருவரும் ஆரம்பத்திலேயே சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, 2ம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது. புஜாராவும் கோலியும் களத்தில் இருந்தனர்.
3ம் நாளான இன்றைய ஆட்டத்தை புஜாராவும் கோலியும் தொடர்ந்தனர். முதல் ஓவரை ஜான்சென் வீசினார். இன்றைய ஆட்டத்தின் முதல் ஓவரின் 2வது பந்திலேயே புஜாரா 9 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அதற்கடுத்த ஓவரிலேயே ரபாடாவின் பந்தில் ரஹானே ஒரு ரன்னுக்கு ஆட்டமிழந்தார்.
ஏற்கனவே கடந்த 2 ஆண்டுகளாக சொதப்பிவரும் புஜாரா மற்றும் ரஹானே ஆகிய இருவரது இடமும் இந்திய அணியில் சந்தேகமாகியிருந்த நிலையில், இந்த தொடரில் அவர்களுக்கு அளிக்கப்பட்டதே கூடுதல் வாய்ப்புதான். அப்படியிருக்கையில், இதிலும் படுமோசமாக சொதப்பினர். கேப்டவுன் டெஸ்ட்டின் 2 இன்னிங்ஸ்களிலும் ரஹானே படுமோசமாக ஆடினார். ஷ்ரேயாஸ் ஐயர், ஹனுமா விஹாரி ஆகிய வீரர்கள் வரிசைகட்டி நிற்கும் நிலையில், ரஹானே - புஜாராவின் தொடர் சொதப்பலால் அவர்களது கெரியர் கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாகவே பார்க்கப்படுகிறது. புஜாராவிற்குக்கூட இன்னும் ஒருசில வாய்ப்புகள் வழங்கப்படலாம். ஆனால் ரஹானேவின் கெரியர் முடிந்தேவிட்டது.
58 ரன்களுக்கே இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில், இந்திய அணியில், கோலியுடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்து ஆடிவருகிறார்.