IPL 2022 CSK தக்கவைக்கும் 4 வீரர்கள் இவங்கதான்..! ரெய்னாவை கழட்டிவிடுகிறது சிஎஸ்கே
ஐபிஎல் 15வது சீசனின் மெகா ஏலத்திற்கு முன்பாக சிஎஸ்கே அணி தக்கவைக்கும் 4 வீரர்கள் யார் யார் என்பது குறித்து பார்ப்போம்.
ஐபிஎல்லில் 14 சீசன்கள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதுவரை 8 அணிகள் மட்டுமே ஆடிவந்த நிலையில், அடுத்த சீசனிலிருந்து கூடுதலாக 2 அணிகள் களமிறங்குகின்றன.
சிஎஸ்கே, ஆர்சிபி, மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், டெல்லி கேபிடள்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய 8 அணிகள் இதுவரை ஆடிவந்த நிலையில், லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள் அடுத்த சீசனிலிருந்து கூடுதலாக இணைகின்றன. அதனால் அடுத்த சீசனில் 10 அணிகள் ஆடவுள்ளன.
எனவே அடுத்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடக்கவுள்ளது. அதனால் ஒவ்வொரு அணியும் தலா 4 வீரர்களை மட்டும் தக்கவைத்துக்கொண்டு மற்ற வீரர்களை விடுவிக்க வேண்டும். புதிய அணிகள் ஏலத்திற்கு முன்பாக 3 வீரர்களை எடுத்துக்கொள்ளலாம்.
ஒவ்வொரு அணியும் 4 வீரர்களை மட்டுமே தக்கவைக்கலாம் என்பதால் பெரிய பெரிய வீரர்கள் கூட அடுத்த சீசனுக்கான ஏலத்தில் இடம்பெறவுள்ளனர்.
இந்நிலையில், எந்தெந்த அணிகள் எந்தெந்த வீரர்களை தக்கவைக்கின்றன என்பது குறித்த தகவல் வெளியாகிவருகிறது. அந்தவகையில், 4 முறை சாம்பியனும், நடப்பு சாம்பியனுமான சிஎஸ்கே அணி எந்த 4 வீரர்களை தக்கவைக்கிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சிஎஸ்கே 4வது முறையாக கோப்பையை வென்றதற்கான பாராட்டு விழா சென்னையில் அண்மையில் நடந்தது. அந்த விழாவில் பேசிய தோனி, இன்னும் சில சீசன்கள் சிஎஸ்கேவிற்காக ஆடுவதை உறுதி செய்தார். அந்தவகையில், தோனியை அடுத்த 3 ஆண்டுகளுக்கு சிஎஸ்கே தக்கவைக்கவுள்ளதாக தெரிகிறது.
2வது வீரராக ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவையும், 3வது வீரராக கடந்த சீசனில் அதிக ரன்களை குவித்த ருதுராஜ் கெய்க்வாட்டையும் தக்கவைக்கிறது சிஎஸ்கே. 4வது வீரராக மொயின் அலி - சாம் கரன் ஆகிய 2 இங்கிலாந்து வீரர்களில் ஒருவரை தக்கவைக்கும் என்று தெரிகிறது. மொயின் அலி தான் முதல் ஆப்சன் என்று தெரிகிறது. மொயின் அலி அல்லது சாம் கரன் தக்கவைக்கப்படலாம்.
சிஎஸ்கே அணி கோப்பைகளை வெல்ல கடந்த காலங்களில் முக்கிய காரணமாக திகழ்ந்த சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னாவை கழட்டிவிடுகிறது சிஎஸ்கே.