சையத் முஷ்டாக் அலி தொடரில் அசாம் அணிக்கு எதிரான போட்டியில் அபாராமாக பேட்டிங் ஆடிய பிரித்வி ஷா 61 பந்தில் 134 ரன்களை குவித்து, இந்திய அணி தேர்வாளர்கள் மற்றும் நிர்வாகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளார். 

இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலமாக திகழும் ஏகப்பட்ட இளம் வீரர்களில் பிரித்வி ஷா முக்கியமான வீரர். இந்திய டெஸ்ட் அணியில் 2018ம் ஆண்டே இடம்பிடித்த பிரித்வி ஷா, காயம் காரணமாக இந்திய அணியில் தனக்கான நிரந்தர இடம்பிடிக்க முடியாமல் திணறிவருகிறார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மற்ற இளம் வீரர்களைவிட விரைவில் இந்திய அணியில் தனக்கான இடத்தை பிடித்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வீரர் பிரித்வி ஷா. ஆனால் அவரது ஃபிட்னெஸ் பிரச்னையால் தனக்கான வாய்ப்பை இழந்தார். அந்த காலக்கட்டத்தில், ஷுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட் ஆகிய டாப் ஆர்டர் வீரர்கள் இந்திய அணியில் இடம்பிடித்துவிட்டனர்.

இதையும் படிங்க - டி20 உலக கோப்பை: ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு மாற்று வீரராக முகமது ஷமி அறிவிப்பு.! வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஆனால் பிரித்வி ஷாவின் பேட்டிங் திறமை அனைவரும் அறிந்ததுதான். அசாதாரணமான இன்னிங்ஸ்களை அவ்வப்போது ஆடி அசத்திவிடுவார். அப்படியான ஒரு இன்னிங்ஸைத்தான், உள்நாட்டு டி20 தொடரான சையத் முஷ்டாக் அலி தொடரிலும் ஆடியுள்ளார்.

சையத் முஷ்டாக் அலி தொடர் கடந்த 11ம் தேதி தொடங்கி நடந்துவருகிறது. இன்று மும்பை - அசாம் அணிகளுக்கு இடையேயான போட்டியில் முதலில் மும்பை அணி பேட்டிங் ஆடியது. மும்பை அணியின் தொடக்க வீரரான பிரித்வி ஷா தொடக்கம் முதலே காட்டடி அடித்தார். பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி சதமடித்த பிரித்வி ஷா 61 பந்தில் 13 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்களுடன் 134 ரன்களை குவித்தார். அவரது அதிரடியால் 20 ஓவரில் 230 ரன்களை குவித்த மும்பை அணி, அசாம் அணியை 169 ரன்களுக்கு சுருட்டி 61 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதையும் படிங்க - 15 ஆண்டுகளுக்கு பின் பாகிஸ்தானில் கிரிக்கெட் ஆடும் இந்திய அணி..? பிசிசிஐ திட்டம்

இந்திய அணியில் அண்மைக்காலமாக தன்னை பரிசீலிக்கக்கூட இல்லாத நிலையில், அபாரமாக பேட்டிங் ஆடி இந்திய அணி நிர்வாகம் மற்றும் தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் பிரித்வி ஷா.