வீடியோவை பார்த்துட்டு குணதிலகாவிடம் மன்னிப்பு கேட்ட பொல்லார்டு..!
முதல் ஒருநாள் போட்டியில் பொல்லார்டு அப்பீல் செய்ததன் விளைவாக, ஃபீல்டிங்கிற்கு இடையூறு செய்ததாக இலங்கை வீரர் குணதிலகாவிற்கு அவுட் கொடுக்கப்பட்டது. அந்த சம்பவத்தின் வீடியோவை பார்த்துவிட்டு போட்டிக்கு பின், குணதிலகாவிடம் பொல்லார்டு மன்னிப்பு கேட்டுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் - இலங்கை இடையே ஆண்டிகுவாவில் நேற்று நடந்த முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணி,49வது ஓவரில் 232 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, ஷாய் ஹோப்பின் சதம்(110) மற்றும் எவின் லூயிஸின் அரைசதம்(65) ஆகியவற்றால் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது.
இந்த போட்டியில் இலங்கை தொடக்க வீரர் குணதிலகா சர்ச்சைக்குரிய முறையில் வெளியேற்றப்பட்டார். இலங்கை இன்னிங்ஸின் 22வது ஓவரை பொல்லார்டு வீசினார். அந்த ஒவரின் முதல் பந்தை குணதிலகா தடுப்பாட்டம் ஆட, பந்து அவரது காலுக்கு கீழே விழுந்தது. அதற்கு அவரும் மறுமுனையில் இருந்த நிசாங்காவும் ரன் ஓட முயன்றனர். அதற்கு ரன் ஓட முடியாது என்று தெரிந்ததால் குணதிலாக சும்மா ஓடுவது போல் ஏய்ப்புதான் காட்டினார். ஆனால் நிசாங்காவோ பாதி தூரம் ஓடிவந்தார். பேட்ஸ்மேன் ஓட முயன்றாலே, பவுலர்கள் விரைந்து சென்று பந்தை எடுப்பது வழக்கம்தான். அதைத்தான் பொல்லார்டும் செய்ய முயன்றார்.
ஆனால் குணதிலகா காலில் பந்து பட்டதையடுத்து, தனக்கும் அதற்கும் சம்மந்தமே இல்லை என்பதை உணர்த்தும் வகையில் கைகளை உயர்த்தினார். ஆனால் அந்த பந்தை எடுத்து மறுமுனையில் ஓடிவந்த நிசாங்காவை அவுட் செய்ய முயன்றார் பொல்லார்டு. அதனால், குணதிலகாவின் செயலில் அதிருப்தியடைந்த பொல்லார்டு, கோபத்தில் அம்பயரிடம் முறையிட, விவகாரம் தேர்டு அம்பயரிடம் சென்றது. தேர்டு அம்பயர், “Obstructing the field" என்ற முறையில் ஃபீல்டரை தொந்தரவு செய்ததாக குணதிலகாவிற்கு அவுட் கொடுத்தார்.
குனதிலகாவிற்கு தேர்டு அம்பயர் அவுட் கொடுத்த விவகாரம் ரசிகர்கள் மத்தியில் கடும் விமர்சனத்துக்குள்ளானது.
இந்நிலையில், அந்த சம்பவத்தின் வீடியோவை பார்த்த பின், குணதிலகா வேண்டுமென்றே பந்தை தட்டவில்லை என்பதை அறிந்து குணதிலகாவிடம் பொல்லார்டு மன்னிப்பு கேட்டுள்ளார். தன்னிடம் பொல்லார்டு மன்னிப்பு கேட்டதாக குணதிலகாவே தெரிவித்தார்.