BAN vs PAK பங்களாதேஷுக்கு எதிராக பட்டைய கிளப்பும் பாகிஸ்தான்! ஓபனர்கள் செம தொடக்கம்;சதத்தை நெருங்கிய அபித் அலி
வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் மிகச்சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்துள்ளனர்.
வங்கதேசம் - பாகிஸ்தான் இடையேயான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி கடந்த 26ம் தேதி தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய வங்கதேச அணி, லிட்டன் தாஸின் அபார சதம் (114) மற்றும் சீனியர் வீரர் முஷ்ஃபிகுர் ரஹீமின் பொறுப்பான பேட்டிங்கால் (91) முதல் இன்னிங்ஸில் 330 ரன்களை குவித்தது.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கி ஆடிவரும் பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் அபித் அலி மற்றும் அப்துல்லா ஷாஃபிக் ஆகிய இருவரும் மிகச்சிறப்பாக ஆடிவருகின்றனர். தொடக்கம் முதலே மிகக்கவனமாகவும் தெளிவாகவும் ஆடிவரும் இவர்கள் வங்கதேசத்துக்கு பெரும் பிரச்னையாக திகழ்கின்றனர்.
மிகச்சிறப்பாக ஆடிய இருவருமே அரைசதம் அடித்தனர். அடித்து ஆடி முதலில் அரைசதம் அடித்தார் அபித் அலி. அரைசதத்தை கடந்த அவர், சதத்தை நெருங்கிய நிலையில், 2ம் நாள் ஆட்டம் முடிந்தது. 2ம் நாள் ஆட்டம் முடிவதற்கு முன் அப்துல்லாவும் அரைசதம் அடித்தார்.
2ம் நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 145 ரன்கள் அடித்துள்ளது. அபித் அலி 93 ரன்களுடனும், அப்துல்லா ஷாஃபிக் 52 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.