#RSAvsPAK கடைசி டி20 போட்டியில் வெற்றி பெற்று தொடரை வென்றது பாகிஸ்தான்
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி 3-1 என தொடரை வென்றது.
பாகிஸ்தான் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து ஆடியது. 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை பாகிஸ்தான் அணி வென்ற நிலையில், 4 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் 3 போட்டிகளின் முடிவில் 2-1 என பாகிஸ்தான் முன்னிலை வகித்த நிலையில், தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி டி20 போட்டி இன்று நடந்தது.
செஞ்சூரியனில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்க அணி தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.
வாண்டெர்டசன் மட்டுமே சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். ஆனாலும் அவரும் 52 ரன்கள் மட்டுமே அடித்தார். மாலன் 33 ரன்களும் மார்க்ரம் 11 ரன்களும் அடித்தனர். மற்ற அனைவருமே ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழக்க, 19.3 ஓவரில் 144 ரன்களுக்கு ஆல் அவுட்டானது தென்னாப்பிரிக்க அணி.
145 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணி, ஃபகர் ஜமானின் அதிரடி அரைசதத்தால் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. அதிரடியாக ஆடிய ஃபகர் ஜமான் 34 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 60 ரன்களை குவித்து 10வது ஓவரில் ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழந்தபோது பாகிஸ்தான் அணியின் ஸ்கோர் 92 ரன்கள்.
அதன்பின்னர் மற்ற வீரர்கள் மளமளவென ஆட்டமிழந்ததால் கடைசி ஓவரில் தான் பாகிஸ்தானால் இலக்கை எட்ட முடிந்தது. இந்த போட்டியில் வென்றதையடுத்து 3-1 என டி20 தொடரை வென்றது பாகிஸ்தான் அணி.