தோனியின் உண்மையான பலமே இதுதான் - இந்திய அணியின் முன்னாள் மனவள பயிற்சியாளர்
தோனியின் அனுபவமும் கேப்டன்சி திறனும் புரிதலும் இந்த உலக கோப்பையில் இந்திய அணிக்கு மிகப்பெரிய பலமாக அமையும் என்பதில் ஐயமில்லை.
இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டனாக திகழ்ந்தவர் தோனி. இந்திய அணிக்கு ஒருநாள் உலக கோப்பை, டி20 உலக கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி என மூன்றுவிதமான சர்வதேச கோப்பைகளையும் வென்று கொடுத்தவர்.
ஆட்டத்தின் சூழலையும் போட்டியின் போக்கையும் கணிப்பதில் தோனிக்கு நிகர் தோனிதான். இக்கட்டான சூழலிலும் பதற்றப்படாமல் நிதானமாக இருந்து அணியை வழிநடத்துவதோடு வீரர்களிடமிருந்து சிறந்த ஆட்டத்தை வெளிக்கொண்டுவருவதில் வல்லவர்.
கள வியூகம், பவுலிங் சுழற்சி, வீரர்களை கையாளும் விதம், வீரர்களை பயன்படுத்தும் விதம், நெருக்கடிகளை சமாளிப்பது, திட்டங்கள் தீட்டுவது ஆகியவற்றில் சிறந்தவர் தோனி. கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினாலும் பவுலர்கள் மற்றும் கேப்டன் கோலிக்கு ஆலோசனை வழங்குவதோடு முக்கியமான நேரத்தில் ஃபீல்டிங் செட்டப்பிலும் உதவுகிறார்.
தோனியின் அனுபவமும் கேப்டன்சி திறனும் புரிதலும் இந்த உலக கோப்பையில் இந்திய அணிக்கு மிகப்பெரிய பலமாக அமையும் என்பதில் ஐயமில்லை. இந்திய அணியின் முன்னாள் மனவள பயிற்சியாளர் பாடி அப்டன், தோனியின் நிதானம், அமைதி, பொறுமை ஆகியவைதான் அவரது உண்மையான பலம் என்று தெரிவித்துள்ளார். எவ்வளவு மோசமான நெருக்கடியான சூழலாக இருந்தாலும் தோனி பதற்றமோ அவசரமோ படமாட்டார். அவரது நிதானம்தான் அவரது பலம் என்று பாடி அப்டன் தெரிவித்துள்ளார்.