வரலாற்றில் இன்று (ஜூலை 13) இந்திய அணியின் வேற லெவல் வெற்றி..! லண்டன் லார்ட்ஸில் தாதா செய்த தரமான சம்பவம் 

கங்குலி தலைமையிலான இந்திய அணி தான், இந்திய கிரிக்கெட்டை வேறொரு தளத்திற்கு அழைத்து சென்றது. சூதாட்ட புகாரில் சிக்கி சின்னபின்னமாகியிருந்த இந்திய கிரிக்கெட்டை, சேவாக், யுவராஜ் சிங், முகமது கைஃப், ஹர்பஜன் சிங், ஜாகீர் கான் ஆகிய இளம் வீரர்களை கொண்டு வலுவான அணியாக கட்டமைத்தார் கங்குலி.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அதன்பின்னர் கங்குலி தலைமையிலான இளம் இந்திய படை, சர்வதேச கிரிக்கெட் அரங்கில் வெற்றிகளை குவித்து கோலோச்சியது. கங்குலி தலைமையிலான இந்திய அணி வென்றதில் முக்கியமான தொடர்களில் ஒன்று, இங்கிலாந்தில் நடந்த நாட்வெஸ்ட் முத்தரப்பு தொடர். 

இங்கிலாந்து, இந்தியா, இலங்கை ஆகிய மூன்று அணிகளுக்கு இடையே நடந்த அந்த தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றதும், கேப்டன் கங்குலி, ஃபிளிண்டாஃபுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பெவிலியனில் நின்று டி ஷர்ட்டை கழற்றி சுற்றிய சம்பவம் காலத்தால் அழியாதது.

அந்த முத்தரப்பு தொடரின் இறுதி போட்டியில் இந்தியாவும் இங்கிலாந்தும் மோதின. லண்டன் லார்ட்ஸில் நடந்த அந்த போட்டியில், முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் டிரெஸ்கோதிக் மற்றும் கேப்டன் நாசர் ஹுசைன் ஆகிய இருவருமே சதமடிக்க, அந்த அணி 50 ஓவரில் 325 ரன்களை குவித்தது.

இதையும் படிங்க - ரோஹித் சர்மா மாபெரும் சாதனை.. ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் டாப் இந்திய வீரர்..! சர்வதேச அளவில் 4ம் இடம்

326 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் ஆடிய இந்திய அணிக்கு தொடக்க வீரர்கள் கங்குலியும் சேவாக்கும் இணைந்து அபாரமான தொடக்கத்தை அந்த போட்டியில் அமைத்து கொடுத்தார்கள். முதல் விக்கெட்டுக்கு அவர்கள் இருவரும் இணைந்து 14.3 ஓவரில் 106 ரன்களை குவித்தனர். இந்திய அணியின் ஸ்கோர் 106 ஆக இருந்தபோது, 60 ரன்களில் கங்குலி ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து சேவாக்கும் 45 ரன்களில் அவுட்டாக, 106 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்த இந்திய அணி, 146 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது. தினேஷ் மோங்கியா, ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் சொற்ப ரன்களில் அவுட்டாக, 146 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது இந்திய அணி. 

இதையடுத்து, முக்கியமான வீரர்களை வீழ்த்திவிட்டதால் வெற்றி நம்பிக்கையில் இருந்த இங்கிலாந்து அணிக்கு, சிம்ம சொப்பனமாக திகழ்ந்து, ஆட்டத்தை தலைகீழாக திருப்பினர் யுவராஜ் சிங்கும் கைஃபும். 146 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணிக்கு, 6வது விக்கெட்டுக்கு 121 ரன்களை குவித்தது யுவராஜ் - கைஃப் ஜோடி. அப்போதைய இளம் வீரர்களான இருவரும் இணைந்து பொறுப்புடனும் அபாரமாகவும் ஆடி ரன்களை குவித்தனர். இருவருமே அரைசதம் அடித்தனர்.

இதையும் படிங்க - 2023ல் இந்தியாவில் நடக்கும் ஒருநாள் உலக கோப்பையில் தென்னாப்பிரிக்கா ஆடமுடியாது..? இதுதான் காரணம்

63 பந்தில் 69 ரன்களை குவித்த யுவராஜ் சிங், இந்திய அணியின் ஸ்கோர் 41.4 ஓவரில் 267 ரன்களாக இருந்தபோது ஆட்டமிழந்தார். அதன்பின்னர் ஹர்பஜன் சிங், அனில் கும்ப்ளே ஆகியோர் ஆட்டமிழந்தாலும், மறுமுனையில் நங்கூரமிட்டு நின்று ஆடிய கைஃப், இறுதிவரை களத்தில் நின்று அணியை வெற்றி பெற செய்தார். யுவராஜ் - கைஃபின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி, கடைசி ஓவரின் மூன்றாவது பந்தில் இலக்கை எட்டி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கைஃப் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 87 ரன்களை அடித்திருந்தார். அந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதும், கங்குலி டி ஷர்ட்டை கழற்றி சுற்றினார். 

அதற்கு சில மாதங்களுக்கு முன் இந்தியாவில் நடந்த போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றதும் ஃபிளிண்டாஃப், டி ஷர்ட்டை கழற்றி சுற்றினார். அந்த சம்பவத்தால் கடும் கோபமடைந்த கங்குலி, அதை மனதிலேயே வைத்திருந்து, அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, லண்டன் லார்ட்ஸில் டி ஷர்ட்டை கழற்றி சுற்றினார். கிரிக்கெட் ரசிகர்கள் எந்த காலத்திலும் மறக்க முடியாத சம்பவம் அது. 

இந்திய அணிக்கு மிக முக்கியமான வெற்றி அது. அந்த போட்டி நடந்து 20 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதே ஜூலை 13ம் தேதி, 2002ம் ஆண்டில் தான் அந்த ஃபைனல் நடந்தது. இந்திய கிரிக்கெட்டிற்கு முக்கியமான அந்த போட்டி நடந்த தினம் இன்று.