இல்லைனா மட்டும் அப்படியே அடிச்சு கிழிச்சிருப்பீங்க.. வாயை கொடுத்து வாங்கி கட்டிய தென்னாப்பிரிக்க வீரர்
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவரும் தென்னாப்பிரிக்க அணி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிகளிலுமே படுதோல்வி அடைந்து தொடரை 2-0 என ஏற்கனவே இழந்துவிட்ட நிலையில், கடைசி போட்டி ராஞ்சியில் இன்று தொடங்கி நடந்துவருகிறது.
விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் போட்டியில் 203 ரன்கள் வித்தியாசத்திலும், புனேவில் நடந்த இரண்டாவது போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 137 ரன்கள் வித்தியாசத்திலும் படுமோசமாக தோல்வியடைந்தது. இரண்டு போட்டிகளிலுமே பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் மோசமாக செயல்பட்டது தென்னாப்பிரிக்க அணி.
இந்நிலையில், இந்திய சுற்றுப்பயணம் குறித்து பேசிய தென்னாப்பிரிக்க தொடக்க வீரர் டீன் எல்கர், இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆடுவதே பெரிய சவாலான காரியம் என்றும் தங்கும் ஹோட்டல்கள் சரியில்லை என்றும் சரியான சாப்பாடும் கிடைக்கவில்லை என்றும் பகிரங்கமாக பேசினார்.
அவரது பேச்சு, சாப்பாடு மற்றும் வீரர்களுக்கான வசதிகள் சரியில்லாததால்தான் சரியாக ஆடமுடியவில்லை என்பதை உணர்த்துவது போன்று இருந்தது. எல்கரின் இந்த பேச்சைக்கேட்டு செம கடுப்பான இந்திய ரசிகர்கள், அவரை கடுமையாக விமர்சித்துவருகின்றனர். தென்னாப்பிரிக்காவின் கேப்டவுனில் தண்ணீர் பற்றாக்குறையால் இந்திய வீரர்களை 2 நிமிடம் மட்டுமே குளிக்கவிட்டது மறந்து போச்சா என்றும், சரியா ஆடாததற்கு இதெல்லாம் ஒரு காரணமா என்றும் நெட்டிசன்கள் வறுத்தெடுத்துவருகின்றனர்.