நீயெல்லாம் ஒரு ஆளுனு பும்ராவை பத்தி பேசுற.. ஆடுன காலத்துலயே ஒண்ணும் முடியல.. ரசாக்கை ரவுண்டுகட்டி அடிக்கும் ரசிகர்கள்
தனக்கு பும்ராவெல்லாம் குழந்தை பவுலர் என்று கூறி அவரை மட்டம்தட்டும் வகையிலும் தன்னைத்தானே புகழ்ந்துகொண்ட பாகிஸ்தான் முன்னாள் வீரர் அப்துல் ரசாக்கை சமூக வலைதளங்களில் கிரிக்கெட் ரசிகர்கள் புரட்டி எடுத்துவருகின்றனர்.
பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் சும்மா இருக்க முடியாமல், வாயை கொடுத்து வாங்கிக்கட்டிவருகிறார். தற்போதைய கிரிக்கெட்டில் தலைசிறந்த வீரர்கள் நிறைய பேர் இல்லை என்றும் 1990கள் மற்றும் 2000ம்கள் காலத்துடன் ஒப்பிடுகையில் தற்போது கிரிக்கெட்டின் தரம் குறைந்துவிட்டதாகவும் கூறுவதற்காக ஒரு ஸ்டேட்மெண்ட்டை சொன்னார் ரசாக்.
அதில், சமகால கிரிக்கெட்டின் சிறந்த வீரர்களாக திகழும் விராட் கோலி, பும்ரா ஆகியோர் குறித்தும் பேசினார். கோலி மற்றும் பும்ரா குறித்து பேசிய அப்துல் ரசாக், 1992ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டுவரை கிரிக்கெட் ஆடிய வீரர்களிடம் கேளுங்கள்.. உண்மையான கிரிக்கெட் என்றால் என்னவென்று அவர்கள் சொல்லுவார்கள். அந்த காலக்கட்டத்தில் தான் பல தலைசிறந்த வீரர்கள் ஆடினார்கள். இப்போதெல்லாம் அந்தளவிற்கு உலகத்தரமான நிறைய வீரர்கள் கிடையாது. பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என எதிலுமே டெப்த் கிடையாது. எல்லாமே அடிப்படை லெவலில்தான் உள்ளது.
விராட் கோலி தொடர்ச்சியாக சீராக சிறப்பாக ஆடி ரன்களை குவித்துவருகிறார். அவர் சிறந்த வீரர் தான். ஆனால் அவரை சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிட முடியாது. அவரது லெவலே வேறு. இப்போது என்னையே எடுத்துக்கொள்வோம். எனக்கு பும்ராவின் பவுலிங்கை எதிர்கொள்வது பெரிய விஷயமே கிடையாது. பும்ராவின் பவுலிங்கை நான் எதிர்கொண்டால், பும்ரா உண்மையான அழுத்தத்தையும் நெருக்கடியையும் உணர்வார். ஏன் இப்படி சொல்கிறேன் என்றால், மெக்ராத், வாசிம் அக்ரம், ஷோயப் அக்தர் போன்ற பவுலர்களை எதிர்கொண்டால், பேட்ஸ்மேனுக்கு தானாகவே நம்பிக்கை அதிகரித்துவிடும். எனவே எனக்கெல்லாம் பும்ரா குழந்தை பவுலர். அவர் மீது என்னால் எளிதாக ஆதிக்கம் செலுத்தி ஆடமுடியும் என்று அப்துல் ரசாக் தெரிவித்திருந்தார்.
பும்ராவை குழந்தை பவுலர் என்று கூறியதற்கு ரசிகர்கள் தக்க பதிலடி கொடுத்துவருகின்றனர். ஆடிய காலத்திலேயே ஒண்ணும் முடியல.. இதுல இப்போதான் வந்து இவரு கழட்டப்போறாரு என்றும், 110 கிமீ வேகத்தில் வீசிய பந்தையே ஆட முடியல.. இவரு பும்ராவிற்கு பயம் காட்டுவாராம் என்றும் டுவிட்டரில் தெறிக்கவிடுகின்றனர். மெக்ராத்தின் பவுலிங்கில் ரசாக் ஆடிய லெட்சணத்தையும் மெக்ராத்துக்கு எதிரான அவரது ரெக்கார்டையும் பதிவு செய்து மூக்கை உடைத்துவருகின்றனர். 2011 உலக கோப்பை அரையிறுதியில் முனாஃப் படேலின் பந்தில் ரசாக் ஆட்டமிழந்ததை சுட்டிக்காட்டி ரசாக்கை தெறிக்கவிடுகின்றனர் ரசிகர்கள்.
சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலியை விட ஷேஷாத் சிறந்த பேட்ஸ்மேன் என்று சொன்ன ஆள்தானே நீ என்றும் விமர்சித்துவருகின்றனர்.