இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான இந்திய அணியில் நடராஜனின் இடம் உறுதியாகியுள்ளது. 

ஐபிஎல்லில் அசத்தலாக ஆடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்த சேலம் சின்னப்பம்பட்டியை சேர்ந்த இடது கை ஃபாஸ்ட் பவுலர் நடராஜன், ஆஸி., சுற்றுப்பயணத்தில் டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் ஆகிய 3 விதமான போட்டிகளிலும் அறிமுகமாகி அபாரமாக பந்துவீசி இந்திய அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஆஸி., சுற்றுப்பயணத்தில் அபாரமாக பந்துவீசிய நடராஜனுக்கு அடுத்தடுத்த தொடர்களிலும் இந்திய அணியில் நிரந்தர இடம் கிடைக்கிறது. உள்நாட்டு ஒருநாள் தொடரான விஜய் ஹசாரே தொடரில் தமிழ்நாடு அணியில் இடம்பெற்றிருந்தார் நடராஜன். இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான இந்திய அணியில் நடராஜனை சேர்ப்பதற்காக, விஜய் ஹசாரே தொடருக்கான தமிழ்நாடு அணியில் இடம்பெற்றிருந்த நடராஜனை, அணியிலிருந்து விடுவிக்குமாறு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திடம் பிசிசிஐ கோரிக்கை விடுத்தது.

பிசிசிஐயின் கோரிக்கையை ஏற்ற தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், தமிழ்நாடு அணியிலிருந்து நடராஜனை விடுவித்துள்ளது. விஜய் ஹசாரே டிராபி வரும் 20ம் தேதி தொடங்கி மார்ச் 14 முடிவடைகிறது. அதேவேளையில், இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர் மார்ச் 12ம் தொடங்குகிறது. எனவே இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் ஆடுவதற்கு நடராஜன் ஃபிட்னெஸுடன் இருக்க வேண்டியிருப்பதாலும், தொடருக்கு முன் குவாரண்டினில் இருக்க வேண்டியிருப்பதாலும், பிசிசிஐயின் கோரிக்கையை ஏற்று நடராஜன் தமிழ்நாடு அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.