சச்சினுக்கு கூட பவுலிங் போடுறது ஈசி; ஆனால் அவருக்கு பவுலிங் போடுறதுனாதான் எனக்கு ரொம்ப பயம்-முரளிதரன் ஓபன்டாக்
சச்சின் டெண்டுல்கருக்கு பந்துவீசக்கூட பயந்ததில்லை. ஆனால் சேவாக்கிற்கு பந்துவீசத்தான் தான் பயப்பட்டதாக இலங்கை முன்னாள் லெஜண்ட் ஸ்பின்னர் முத்தையா முரளிதரன் கூறியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் ஆல்டைம் பெஸ்ட் பவுலர்களில் ஒருவரும், ஆல்டைம் பெஸ்ட் ஸ்பின்னருமான இலங்கை முன்னாள் லெஜண்ட் ஸ்பின்னர் முத்தையா முரளிதரன், 1992லிருந்து 2011 வரை சர்வதேச கிரிக்கெட்டில் ஆடினார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள முரளிதரன், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர் என்ற சாதனைக்கு சொந்தக்காரராக திகழ்கிறார். இந்த சாதனையை இனிமேல் ஒரு பவுலர் முறியடிப்பது என்பது கிட்டத்தட்ட முடியாத காரியம்.
முரளிதரன் அவரது கிரிக்கெட் கெரியரில், சச்சின் டெண்டுல்கர், பிரயன் லாரா, ஸ்டீவ் வாக், ஜாக் காலிஸ், ராகுல் டிராவிட், ரிக்கி பாண்டிங், ஸ்டீஃபன் ஃப்ளெமிங், க்ரேம் ஸ்மித், அலெஸ்டர் குக் உள்ளிட்ட பல சிறந்த வீரர்களுக்கு பந்துவீசியுள்ளார்.
எத்தனையோ மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களுக்கு பந்துவீசியிருந்தாலும், தன்னை அச்சுறுத்திய பேட்ஸ்மேன் யார் என்று முரளிதரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள முரளிதரன், சச்சின் டெண்டுல்கருக்கு பந்துவீசக்கூட நான் பயந்ததில்லை. ஏனென்றால், அவரை அவுட்டாக்குவது கடினம் என்றாலும், பெரிய பாதிப்பை பவுலருக்கு கொடுத்துவிடமாட்டார். ஆனால் சேவாக் தாறுமாறாக அடித்து பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டார்.
சேவாக்கிற்கு பந்துவீசும்போது எப்போதுமே, அவரை ரன் அடிக்கவிடக்கூடாது என்ற தடுப்பு உத்தியுடன் தான் ஃபீல்டிங் செட் செய்வேன். அவராக தவறு செய்யும் வரை காத்திருந்துதான் அவரது விக்கெட்டை வீழ்த்த வேண்டும். டெஸ்ட் கிரிக்கெட்டில் உணவு இடைவேளைக்கு பிறகு சேவாக் ஆட்டமிழந்தாலும், முதல் ஒரு செசனில் 150 ரன்களை அதற்குள்ளாக அடித்திருப்பார். அந்தமாதிரியான வீரர் சேவாக். பிரயன் லாராவும் அப்படித்தான். பிரயன் லாரா செட்டில் ஆகிவிட்டால், அது அவருடைய நாளாக இருந்தால், அடி நொறுக்கிவிடுவார் என்று முரளிதரன் தெரிவித்திருக்கிறார்.