#PBKSvsMI ரோஹித் சர்மா அதிரடி அரைசதம் அடித்தும் குறைந்த ஸ்கோருக்கு சுருண்ட மும்பை இந்தியன்ஸ்
பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் 20 ஓவரில் வெறும் 131 ரன்கள் மட்டுமே அடித்த மும்பை இந்தியன்ஸ் அணி, 132 ரன்களை பஞ்சாப்புக்கு இலக்காக நிர்ணயித்துள்ளது.
ஐபிஎல் 14வது சீசனின் இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் ஆடிவருகின்றன. டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் கேஎல் ராகுல், மும்பை அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது.
மும்பை அணியின் தொடக்க வீரர் டி காக் இந்த போட்டியிலும் 3 ரன்களில் ஆட்டமிழக்க, 3ம் வரிசையில் வந்த இஷான் கிஷன் ரன் அடிக்க முடியாமல் திணறினார். களத்திற்கு வந்தது முதலே திணறிய இஷான் கிஷன், 17 பந்தில் 6 ரன் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார்.
பவர்ப்ளேயில் மும்பை அணி 2 விக்கெட் இழப்பிற்கு வெறும் 20 ரன்கள் மட்டுமே அடித்தது. இதையடுத்து ரோஹித்துடன் ஜோடி சேர்ந்த சூர்யகுமார் அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஆட, ரோஹித் சர்மா களத்தில் செட்டில் ஆனபின்னர், பவுண்டரி மற்றும் சிக்ஸர்களை விளாசி அரைசதம் அடித்தார். அதிரடியாக ஆடிய சூர்யகுமார் 33 ரன்னிலும், அரைசதம் அடித்த ரோஹித் சர்மா 63 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
அதன்பின்னர் பொல்லார்டு, பாண்டியா பிரதர்ஸ் ஆகியோரையும் அடித்து ஆடவிடாமல் பஞ்சாப் பவுலர்கள் ரவி பிஷ்னோய் மற்றும் ஷமி ஆகியோர் கட்டுப்படுத்த 20 ஓவரில் வெறும் 131 ரன்கள் மட்டுமே அடித்த மும்பை அணி, 132 ரன்கள் என்ற எளிய இலக்கை பஞ்சாப்புக்கு நிர்ணயித்துள்ளது.