#IPL2021Auction எதிர்பார்த்தபடியே அர்ஜுன் டெண்டுல்கரை ஏலத்தில் எடுத்த மும்பை இந்தியன்ஸ்..!
கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கரை மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.
ஐபிஎல் 14வது சீசனுக்கான ஏலம் சென்னையில் இன்று நடந்தது. ஆர்சிபி, பஞ்சாப் கிங்ஸ் ஆகிய முதல் முறையாக கோப்பையை எதிர்நோக்கியுள்ள அணிகள், ஏலத்தில் போட்டி போட்டுக்கொண்டு பணத்தை வாரி இறைத்து வீரர்களை ஏலத்தில் எடுத்தனர்.
ஆனால், மிக வலுவான கோர் டீமுடன் 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி, அலட்டிக்கொள்ளாமல் வீரர்களை ஏலமெடுத்தனர்.
ஆஸி., ஃபாஸ்ட் பவுலர் நேதன் குல்ட்டர்நைலை ரூ.5 கோடிக்கும், நியூசிலாந்து ஃபாஸ்ட் பவுலர் ஆடம் மில்னேவை ரூ.3.20 கோடிக்கும், சீனியர் ரிஸ்ட் ஸ்பின்னர் பியூஷ் சாவ்லாவை ரூ.2.40 கோடிக்கும் எடுத்த மும்பை இந்தியன்ஸ் அணி, பஞ்சாப் அணியால் கழட்டிவிடப்பட்ட நியூசிலாந்து ஆல்ரவுண்டர் ஜேம்ஸ் நீஷமை ரூ.50 லட்சம் என்ற அடிப்படை விலைக்கு எடுத்தது.
யத்விர் சராக், மார்கோ ஜான்சன் ஆகிய இருவரையும் அவர்களது அடிப்படை விலையான ரூ.20 லட்சத்திற்கு எடுத்த மும்பை இந்தியன்ஸ், எதிர்பார்த்தபடியே சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கரை ஏலத்தில் எடுத்தது. அர்ஜுனின் அடிப்படை விலையான ரூ.20 லட்சத்திற்கு எடுத்தது மும்பை இந்தியன்ஸ் அணி.