#PAKvsSA 2வது டி20: முகமது ரிஸ்வானின் அதிரடி அரைசதத்தால் டீசண்ட்டான ஸ்கோர் அடித்த பாகிஸ்தான்..!
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் ரிஸ்வானின் அரைசதத்தால் பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 144 ரன்கள் அடித்தது.
தென்னாப்பிரிக்க அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. டெஸ்ட் தொடரை பாகிஸ்தான் வென்ற நிலையில், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியிலும் பாகிஸ்தான் வென்றது. 2வது டி20 போட்டி லாகூரில் இன்று நடந்துவருகிறது.
டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் முகமது ரிஸ்வான் மட்டுமே சிறப்பாக ஆடினார். தொடக்க வீரரும் கேப்டனுமான பாபர் அசாம் 5 ரன்னிலும், ஹைதர் அலி 10 ரன்னிலும், டலட் 3 ரன்னிலும் இஃப்டிகார் 20 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
ஒருமுனையில் தொடர்ச்சியாக விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய ரிஸ்வான் அரைசதம் அடித்தார். ஆனால் அதை பெரிய இன்னிங்ஸாக மாற்றாமல் அரைசதம் அடித்த மாத்திரத்தில் 51 ரன்னில் ஆட்டமிழக்க, டெத் ஓவர்களில் ஃபஹீம் அஷ்ரஃப் அதிரடியாக ஆடி 12 பந்தில் 30 ரன்கள் அடித்ததால், 20 ஓவரில் பாகிஸ்தான் அணி 144 ரன்கள் அடித்தது. 145 ரன்கள் என்ற இலக்கை தென்னாப்பிரிக்காவுக்கு நிர்ணயித்துள்ளது.