அவரு ஒருவரால் தான் டி20 கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடிக்க முடியும்..! முகமது கைஃப் அதீத நம்பிக்கை
இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப், ரோஹித் சர்மாவால் தான் டி20 கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடிக்க முடியும் என தெரிவித்துள்ளார்.
ரோஹித் சர்மா இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் துணை கேப்டன். வெள்ளைப்பந்து கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரராக திகழும் ரோஹித் சர்மா, ஒருநாள் கிரிக்கெட்டில் 3 இரட்டை சதங்கள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் 4 சதங்களை விளாசியுள்ளார்.
ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகபட்சமாக ஒரு இன்னிங்ஸில் 264 ரன்களை குவித்து அசாத்திய சாதனையை படைத்தவர் ரோஹித் சர்மா. ரோஹித் சர்மா சதத்தை கடந்துவிட்டாலே, அவரிடமிருந்து இரட்டை சதத்தை எதிர்பார்க்குமளவிற்கு, தன் மீதான மதிப்பீட்டை உயர்த்தியிருக்கிறார் ரோஹித் சர்மா.
டி20 கிரிக்கெட்டில் ஒரு பேட்ஸ்மேன் இதுவரை இரட்டை சதம் அடித்ததில்லை. அப்படி, ஒரு வீரரால் இரட்டை சதம் அடிக்க முடியும் என்றால், அது ரோஹித் சர்மாவால் தான் முடியும் என்று முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.
ரோஹித் சர்மா 107 சர்வதேச டி20 போட்டிகளில் ஆடி 4 சதங்களுடன், 2713 ரன்களை குவித்துள்ளார். மொத்தமாக 328 டி20 போட்டிகளில் ஆடி 8642 ரன்களை குவித்துள்ளார்.
”டி20 கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடிக்கும் தகுதியும் திறமையும் ரோஹித்திடம் உள்ளது. அவரது ஸ்டிரைக் ரேட் தான் அதற்கு சான்று. சதமடித்த பின்னர் அவரது ஸ்டிரைக் ரேட் 250-300. டி20 கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடிப்பது கடினம் தான். ஆனால் ரோஹித்தால் அது முடியும் என்று கைஃப் தெரிவித்துள்ளார்.