ரஹானே சதமடிக்கும் முன் 5 முறை அவரை அவுட்டாக்கியிருப்பேன்..! சொல்லிக்காட்டிய மிட்செல் ஸ்டார்க்
2வது டெஸ்ட் போட்டியில் சதமடித்த ரஹானே, சதமடிக்கும் முன் அவரை ஐந்து முறை அவுட்டாக்க கிடைத்த வாய்ப்பை தவறவிட்டதை சுட்டிக்காட்டினார் மிட்செல் ஸ்டார்க்.
இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 2வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நேற்று தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்ஸில் 195 ரன்களுக்கு சுருண்டது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக பும்ரா 4 விக்கெட்டுகளையும் அஷ்வின் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிவரும் இந்திய அணி, 2ம் நாள் ஆட்ட முடிவில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 277 ரன்கள் அடித்துள்ளது. அபாரமாக ஆடி சதமடித்த கேப்டன் ரஹானே 104 ரன்களுடனும் ஜடேஜா 40 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
கேப்டன் பொறுப்பை ஏற்றதுமே, தன் மீதான எதிர்பார்ப்பை வீணடிக்காமல் சதமடித்து, ஒரு கேப்டனாக அணியை முன்னின்று வழிநடத்துவதை உறுதி செய்துள்ளார் ரஹானே. ஆனால் ரஹானேவின் ஏராளமான கேட்ச் வாய்ப்புகளை கோட்டைவிட்டனர் ஆஸி., வீரர்கள். அதிலும் ஸ்டார்க்கின் பவுலிங்கில் மட்டுமே ஐந்து கேட்ச்கள் தவறவிடப்பட்டன.
2ம் நாள் ஆட்டம் முடிந்த பின்னர் பேசிய மிட்செல் ஸ்டார்க், ரஹானே உண்மையாகவே மிகச்சிறப்பாக பேட்டிங் ஆடினார். அவர் சதமடிக்கும் முன்பே அவரை ஐந்து முறை அவுட்டாக்கியிருப்பேன். அவரது அதிர்ஷ்டம் அனைத்திலும் தப்பி, சதமடித்தார் என்று ஸ்டார்க் தெரிவித்தார்.
ஆஸி., வீரர்களின் ஃபீல்டிங் படுமோசமாக இருந்தது. ஆஸி., அணியின் தரத்திற்கு, இன்றைய ஆட்டத்தில் அவர்கள் செய்த ஃபீல்டிங் படுமட்டம்.