கடைசி டெஸ்ட்டில் அவரை தூக்கிட்டு இவரை சேருங்க..! பாகிஸ்தான் அணி செய்தே தீர வேண்டிய மாற்றம்
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணியில் ஒரு மாற்றம் செய்ய இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் வலியுறுத்தியுள்ளார்.
பாகிஸ்தான் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதலில் டெஸ்ட் தொடர் நடந்துவரும் நிலையில், இதுவரை 2 டெஸ்ட் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டி மழையால் டிரா ஆனது.
3வது டெஸ்ட் வரும் 21ம் தேதி சவுத்தாம்ப்டனில் தொடங்கவுள்ளது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியில் ஃபவாத் ஆலமை நீக்கிவிட்டு ஷதாப் கானை சேர்க்க வேண்டும் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் வலியுறுத்தியுள்ளார்.
முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி நன்றாக ஆடியது. பாகிஸ்தான் அணிக்கு வெற்றி வாய்ப்பு இருந்த நிலையில், அந்த அணி அதை சரியாக பயன்படுத்தி கொள்ளாததால் தோல்வியடைந்தது. ஆனால் இரண்டாவது போட்டியில் அந்த அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 236 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அபித் அலி மற்றும் ரிஸ்வான் ஆகிய இருவரை தவிர வேறு யாருமே சரியாக ஆடவில்லை. மழையால் அந்த போட்டியின் முதல் இன்னிங்ஸே முழுமையாக முடியவில்லை. அதனால் அந்த போட்டி டிரா ஆனது. மழை பெய்யாமல் இருந்திருந்தால், இங்கிலாந்து தான் வென்றிருக்கும்.
முதல் போட்டியில் ஆடிய பாகிஸ்தான் அணியில் ஷதாப் கான் மட்டும் இரண்டாவது போட்டியில் நீக்கப்பட்டு ஃபவாத் ஆலம் 11 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பாகிஸ்தான் டெஸ்ட் அணியில் ஆடினார். ஆனால் அந்த வாய்ப்பை ஃபவாத் ஆலம் சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை. இந்த அரிய வாய்ப்பை வீணடித்த அவர் டக் அவுட்டானார். வெறும் நான்கே பந்தில் டக் அவுட்டானார். சவுத்தாம்ப்டன் ஆடுகளத்தில் பந்து டர்ன் ஆகாது என்பதால், ஸ்பின்னர் ஷதாப் கான் நீக்கப்பட்டு, பேட்டிங் ஆர்டரை வலுப்படுத்தும் விதமாக கூடுதல் பேட்ஸ்மேனாக ஃபவாத் ஆலம் சேர்க்கப்பட்டார். ஆனால் அந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளாமல் சொதப்பினார் ஃபவாத் ஆலம்.
இந்நிலையில், கடைசி டெஸ்ட்டில் அவரை நீக்கிவிட்டு ஷதாப் கானை சேர்க்க வேண்டும் என மைக்கேல் வாகன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து கிரிக்பஸ் ஸ்போர்ட்ஸ் இணையதளத்தில் பேசிய மைக்கேல் வாகன், பாகிஸ்தான் அணி கடைசி போட்டியில் ஒரு மாற்றத்தை செய்ய வேண்டும். 2வது டெஸ்ட் நடந்த சவுத்தாம்ப்டனில் தான் 3வது டெஸ்ட்டும் நடக்கவுள்ளது. கடந்த போட்டியின்போது சவுத்தாம்ப்டன் ஆடுகளத்தில் பந்து ஸ்பின் ஆனது. அதனால் கடைசி போட்டியில் ஃபவாத் ஆலமை நீக்கிவிட்டு ஷதாப் கானை ஆடவைக்க வேண்டும். 2வது போட்டிக்கான அதே பிட்ச்சைத்தான் கடைசி போட்டிக்கும் பயன்படுத்துவார்கள் என நினைக்கிறேன். எனவே கூடுதலாக ஒரு ஸ்பின்னர் அணிக்கு தேவை. ஷதாப் கான், பவுலிங் மட்டுமல்லாது, இங்கிலாந்து கண்டிஷனில் நன்றாக பேட்டிங் ஆடி தன்னை நிரூபித்திருக்கும் வீரரும் கூட. அதனால் அவரை அணியில் எடுக்க வேண்டும் என மைக்கேல் வாகன் வலியுறுத்தியுள்ளார்.