#ENGvsIND அஷ்வினை இந்திய அணியில் எடுக்காதது சுத்த பைத்தியக்காரத்தனம்..! மைக்கேல் வான் கடும் தாக்கு
இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட்டில் ரவிச்சந்திரன் அஷ்வினை இந்திய அணியில் எடுக்காதது சுத்த பைத்தியக்காரத்தனம் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் 4 போட்டிகளில் அஷ்வின் ஆடவைக்கப்படவில்லை. டெஸ்ட் கிரிக்கெட்டில் அனைத்து நாடுகளிலும், எந்தவிதமான கண்டிஷனிலும் சிறப்பாக பந்துவீசி ஆட்டத்தின் முடிவில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சீனியர் ஸ்பின்னர் அஷ்வின்.
ஸ்பின் பவுலிங் மட்டுமல்லாது, பேட்டிங்கும் நன்றாக ஆடக்கூடியவர். டெஸ்ட் கிரிக்கெட்டில் 413 விக்கெட்டுகள் வீழ்த்தியிருப்பதுடன், 5 சதங்களும் அடித்துள்ளார்.
நல்ல ஆல்ரவுண்டரான அஷ்வினை, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஒரு போட்டியில் கூட இந்திய அணியின் ஆடும் லெவனில் எடுக்கவில்லை. கண்டிஷனை காரணம் காட்டியே அஷ்வின் ஓரங்கட்டப்படுகிறார். ஆனால் பசுமையான ஆடுகளமாக இருந்தாலும், கடைசி 2 நாட்களில் சற்று வறண்டு ஸ்பின் பவுலிங்கிற்கு ஒத்துழைக்கும். அதனால் 2வது இன்னிங்ஸில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவர் அஷ்வின்.
அதுமட்டுமல்லாது இடது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக அருமையாக வீசக்கூடியவர் அஷ்வின். இங்கிலாந்து அணியில் இடது கை பேட்ஸ்மேன்கள் கணிசமாக இருக்கின்றனர். ஆனாலும் அஷ்வின் அணியில் எடுக்கப்படாமல் ஓரங்கட்டப்படுகிறார். இந்திய அணி அஷ்வினை ஆடவைக்க வேண்டும் என்று ஆரம்பத்திலிருந்தே வலியுறுத்திவருபவர்களில் முக்கியமானவர் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான்.
4வது டெஸ்ட்டிலும் அஷ்வின் அணியில் எடுக்கப்படாததையடுத்து, அஷ்வினை எடுக்காதது சுத்த பைத்தியக்காரத்தனம் என்று விமர்சித்துள்ளார் மைக்கேல் வான்.
இதுகுறித்து மைக்கேல் வான் பதிவிட்டுள்ள டுவீட்டில், அஷ்வினை அணியில் எடுக்காதது, இந்த ஒட்டுமொத்த தொடரிலேயே நான் பார்த்த மிகப்பெரிய தவறு. 413 விக்கெட்டுகள், 5 டெஸ்ட் சதங்கள் விளாசியுள்ள அஷ்வினை எடுக்காதது சுத்த பைத்தியக்காரத்தனம் என்று மைக்கேல் வான் கடுமையாக விமர்சித்து டுவீட் செய்துள்ளார்.