#LPL2021 லங்கா பிரீமியர் லீக் திட்டமிட்டபடியே ஜூலை 30 தொடங்கும்..! இலங்கை கிரிக்கெட் வாரியம் அதிரடி
லங்கா பிரீமியர் லீக் 2வது சீசன் திட்டமிட்டபடியே வரும் ஜூலை 30ம் தேதி தொடங்கும் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ஐபிஎல் நடத்தப்படுவதை போன்று, இலங்கையில் லங்கா பிரீமியர் லீக் நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு தான் லங்கா பிரீமியர் லீக் முதல் சீசன் நடத்தப்பட்டது. கடந்த ஆண்டு நவம்பர் - டிசம்பர் காலக்கட்டத்தில் முதல் சீசன் நடத்தப்பட்டது.
இந்நிலையில், இந்த ஆண்டு 2வது சீசன் நடத்தப்படவுள்ளது. இந்தியாவுக்கு எதிரான தொடரை முடித்துவிட்டு, ஜூலை 30ம் தேதி 2வது சீசன் தொடங்குகிறது.
இந்திய அணி இலங்கைக்கு சென்று 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. ஜூலை 13 முதல் நடக்கும் அந்த தொடர் முடிந்ததும், ஜூலை 30ம் தேதி லங்கா பிரீமியர் லீக் 2வது சீசனை நடத்த இலங்கை கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டிருந்த நிலையில், திட்டமிட்டபடியே ஜூலை 30 தொடங்கி ஆகஸ்ட் 22 வரை நடத்தப்படும் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
இலங்கை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி, பயோபபுளை கண்டிப்புடன் பின்பற்றி நடத்தப்படும் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
கொழும்பு கிங்ஸ், டம்புல்லா வைக்கிங், கல்லீ கிளாடியேட்டர்ஸ், ஜஃப்னா ஸ்டாலியன்ஸ், கண்டி டஸ்கர்ஸ் ஆகிய அணிகள் ஆடுகின்றன. கடந்த சீசனில் ஜஃப்னா ஸ்டாலியன்ஸ் அணி கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.