இலங்கை தொடர் அந்த இந்திய வீரருக்கு வாழ்வா சாவா போராட்டம்..!
இலங்கை சுற்றுப்பயணத்தில் சிறப்பாக ஆடினால் மீண்டும் இந்திய அணியில் தனக்கான இடத்தை பிடிக்க முடியும் என்று குல்தீப் யாதவ் உறுதியாக நம்புகிறார்.
அஷ்வின் - ஜடேஜா ஸ்பின் ஜோடியின் இடத்தை பிடித்த குல்தீப் - சாஹல் ஜோடியால், அஷ்வின் - ஜடேஜா அளவிற்கு நீடித்து நிலைக்க முடியவில்லை. 2017-2018ம் ஆண்டுகளில் அதிவேகமாக வளர்ந்து, இந்திய அணிக்காக ஒவ்வொரு போட்டியிலும் விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிகளை பெற்றுக்கொடுத்த குல்தீப் - சாஹல் ஸ்பின் ஜோடி, 2019லிருந்து வீழ்ச்சியை சந்திக்க ஆரம்பித்தது. அதற்கு பின்னர் இருவரும் இணைந்து இந்திய அணிக்காக ஆடவேயில்லை.
3 விதமான போட்டிகளிலும் அபாரமாக பந்துவீசி வந்த குல்தீப் யாதவ், 2019 ஐபிஎல்லில் மரண அடி வாங்கினார். அதன்பின்னர் இந்திய அணியிலிருந்து மட்டுமல்லாது ஐபிஎல்லில் அவர் ஆடும் அணியில் கூட ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்காமல் ஓரங்கட்டப்பட்டார்.
3 விதமான சர்வதேச போட்டிகளுக்கான இந்திய அணியிலும் ஆடிவந்த குல்தீப், இப்போது எந்தவிதமான போட்டியிலும் ஆடுவதில்லை. விராட் கோலி தலைமையிலான மெயின் இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடுவதால், ஷிகர் தவான் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி இலங்கைக்கு சென்றுள்ளது. இந்த தொடரில் குல்தீப் யாதவுக்கு ஆட வாய்ப்பு கிடைக்கலாம்.
இந்நிலையில், இந்த தொடரில் அபாரமாக ஆடி இந்திய அணியில் மீண்டும் தனக்கான இடத்தை பிடிக்கும் முனைப்பில் இருக்கும் குல்தீப் யாதவ், அது குறித்து பேசியுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள குல்தீப் யாதவ், நான் நன்றாக ஆடினால், கண்டிப்பாக மீண்டும் அணியில் இடம்பிடிப்பேன். அந்தவகையில் இலங்கை சுற்றுப்பயணம் எனக்கு மிக மிக முக்கியமான ஒன்று. நான் சிறப்பாக செயல்பட இந்த தொடர் எனக்கு அருமையான வாய்ப்பு.
இலங்கை தொடருக்கு அடுத்து ஐபிஎல் இருக்கிறது. எனவே அடுத்தடுத்து நல்ல வாய்ப்புகள் உள்ளன. அவற்றை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஆனால் உண்மையை சொல்ல வேண்டுமென்றால், டி20 உலக கோப்பை பற்றி நான் பெரிதாக சிந்திக்கவோ கவலைப்படவோ இல்லை. அணியில் எனது பணி என்னவென்பது மட்டும் எனக்கு நன்றாக தெரியும் என்று குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார்.