3 பந்துகளில் 10 ரன்கள் தேவை.. கடைசி 2 பந்தில் 2 சிக்ஸர்கள்.. தெறிக்கவிட்ட குருணல் பாண்டியா!! வீடியோ
3 பந்துகளில் 10 ரன்கள் தேவை. கடைசி இரண்டு பந்தில் 2 சிக்ஸர்கள் விளாசிய குருணல் பாண்டியா.
ஐபிஎல் 11 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளன. 12வது சீசன் வரும் 23ம் தேதி தொடங்குகிறது.
ஐபிஎல்லில் வெற்றிகரமான அணிகள் என்றால் அது சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய இரண்டு அணிகளும் தான். இரண்டு அணிகளுமே தலா 3 முறை கோப்பையை வென்றுள்ளன.
ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, இறுதி போட்டிக்கு சென்ற போதெல்லாம் கோப்பையை வென்றுள்ளது. ஐபிஎல்லில் வெற்றிகரமான அணியாக மட்டுமல்லாமல் அதிகமான ரசிகர்களை பெற்ற அணியாகவும் மும்பை இந்தியன்ஸ் அணி திகழ்கிறது.
ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா, குருணல் பாண்டியா, பும்ரா ஆகியோர் மும்பை இந்தியன்ஸ் அணியின் நிரந்தர வீரர்களாக திகழ்கின்றனர். இவர்களில் ரோஹித்தும் பும்ராவும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆடிய நிலையில், பாண்டியா சகோதரர்கள் கடந்த புதன்கிழமை முதல் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஹர்திக் பாண்டியா மற்றும் குருணல் பாண்டியா ஆகிய இருவருமே தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். பயிற்சியில் சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் ராபின் சிங், 3 பந்துகளில் 10 ரன்கள் தேவை என்ற சூழலில் ஆடுவதாக நினைத்துக்கொண்டு ஆடுமாறு குருணல் பாண்டியாவிடம் கூறியுள்ளார். ராபின் சிங்கின் சவாலை ஏற்று ஆடிய குருணல் பாண்டியா, முதல் பந்தை சரியாக அடிக்கவில்லை. அதனால் அதிருப்தியடைகிறார் குருணல். பின்னர் அடுத்த இரண்டு பந்துகளையும் சிக்ஸருக்கு விரட்டி வெற்றி பெறுகிறார். இந்த வீடியோவை மும்பை இந்தியன்ஸ் அணி சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளது. அந்த வீடியோ வைரலாகிவருகிறது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் பின்வரிசை பேட்ஸ்மேனான குருணல் பாண்டியா, பல தருணங்களில் இதுபோன்ற இக்கட்டான சூழலை எதிர்கொள்ள நேரிடும். எனவே அவருக்கு இப்படியொரு சவாலை விடுத்தார் ராபின் சிங். அதை ஏற்று, அதில் வெற்றியும் பெற்றுள்ளார் குருணல் பாண்டியா.