#RRvsPBKS கேஎல் ராகுல், தீபக் ஹூடா காட்டடி பேட்டிங்..! 20 ஓவரில் 221 ரன்களை குவித்த பஞ்சாப் கிங்ஸ்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், கேஎல் ராகுல் மற்றும் தீபக் ஹூடா ஆகிய இருவரின் அதிரடியான பேட்டிங்கால் 20 ஓவரில் 221 ரன்களை குவித்தது பஞ்சாப் கிங்ஸ் அணி.
ஐபிஎல் 14வது சீசனின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. மும்பை வான்கடேவில் நடந்துவரும் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் அணியின் தொடக்க வீரர் மயன்க் அகர்வால், 14 ரன்களுக்கு 3வது ஓவரிலேயே ஆட்டமிழந்தார். ராஜஸ்தான் அணியின் அறிமுக பவுலர் சக்காரியாவின் பந்தில் ஆட்டமிழந்தார்.
அதன்பின்னர் ராகுலுடன் ஜோடி சேர்ந்த கெய்ல் அதிரடியாக ஆடி 40 ரன்களை அடித்த நிலையில், ரியான் பராக்கின் சுழலில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் ராகுலுடன் ஜோடி சேர்ந்த தீபக் ஹூடா, சிக்ஸர் மழை பொழிந்தார். அதிரடியாக ஆடிய ராகுல், அரைசதம் அடிக்க, தீபக் ஹூடா, 20 பந்தில் அரைசதம் அடித்தார்.
3வது விக்கெட்டுக்கு ராகுலும் ஹூடாவும் இணைந்து 8 ஓவரில் 105 ரன்களை குவித்தனர். ஹூடா 28 பந்தில் 64 ரன்களுக்கு ஆட்டமிழக்க, 91 ரன்கள் அடித்த ராகுல் கடைசி ஓவரில் ஆட்டமிழக்க, 20 ஓவரில் 221 ரன்களை குவித்தது பஞ்சாப் கிங்ஸ் அணி. 222 ரன்கள் என்ற கடின இலக்கை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விரட்டிவருகிறது.