#SRHvsKKR நிதிஷ் ராணா, ராகுல் திரிபாதி அதிரடி அரைசதம்..! சன்ரைசர்ஸுக்கு கடின இலக்கை நிர்ணயித்த கேகேஆர்
நிதிஷ் ராணா மற்றும் ராகுல் திரிபாதியின் அதிரடி அரைசதங்களால் 20 ஓவரில் 187 ரன்களை குவித்த கேகேஆர் அணி, 188 ரன்கள் என்ற கடின இலக்கை சன்ரைசர்ஸுக்கு நிர்ணயித்துள்ளது.
ஐபிஎல் 14வது சீசனின் இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கேகேஆர் அணிகள் ஆடிவருகின்றன. சென்னையில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் கேப்டன் டேவிட் வார்னர், ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த கேகேஆர் அணியின் தொடக்க வீரர் ஷுப்மன் கில் 15 ரன்களில் ஆட்டமிழக்க, அதிரடியாக ஆடிய நிதிஷ் ராணா அரைசதம் அடித்தார். அவருடன் 2வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ராகுல் திரிபாதியும் அதிரடியாக ஆடினார்.
நிதிஷ் ராணாவும் திரிபாதியும் சேர்ந்து 2வது விக்கெட்டுக்கு 93 ரன்களை குவித்தனர். அரைசதம் அடித்த திரிபாதி 53 ரன்னில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் களத்திற்கு வந்த ரசல்(5) மற்றும் மோர்கன்(2) ஆகிய இருவரும் ஏமாற்றமளிக்க, 56 பந்தில் 9 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 80 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.
டெத் ஓவரில் அடித்து ஆடிய தினேஷ் கார்த்திக், 9 பந்தில் 22 ரன்கள் அடிக்க, 20 ஓவரில் கேகேஆர் அணி 187 ரன்கள் அடித்து, 188 ரன்கள் என்ற கடின இலக்கை சன்ரைசர்ஸுக்கு நிர்ணயித்துள்ளது. சென்னை ஆடுகளத்தில் இது கடினமான இலக்குதான் என்றாலும், இந்த இலக்கை விரட்டுமளவிற்கான பேட்டிங் ஆர்டர் சன்ரைசர்ஸிடம் உள்ளது.