IPL 2022 கேகேஆர் அணி தக்கவைக்கும் 4 வீரர்கள் இவர்களா..?
ஐபிஎல் 15வது சீசனுக்கு முன் கேகேஆர் அணி தக்கவைக்க வாய்ப்புள்ள 4 வீரர்கள் யார் யார் என்று பார்ப்போம்.
ஐபிஎல்லில் இதுவரை 8 அணிகள் ஆடிவந்த நிலையில், அடுத்த சீசனிலிருந்து கூடுதலாக 2 அணிகள் சேர்வதால் மொத்தம் 10 அணிகள் ஆடவுள்ளன. லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள் புதிதாக களமிறங்குகின்றன.
அதனால் அடுத்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடக்கவுள்ளது. எனவே ஒவ்வொரு அணியும் 4 வீரர்களை மட்டுமே தக்கவைத்துக்கொண்டு மற்றவர்களை விடுவிக்க வேண்டும். 2 புதிய அணிகளும், ஏலத்திற்கு முன்பாக தலா 3 வீரர்களை எடுத்துக்கொள்ளலாம்.
ஐபிஎல் அணிகள் தக்கவைக்கும் வீரர்கள் பட்டியலை சமர்ப்பிக்க வரும் 30ம் தேதியே கடைசி நாள். எனவே ஒவ்வொரு அணியும் எந்த 4 வீரர்களை தக்கவைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், டேவிட் வார்னர், ஷிகர் தவான், மயன்க் அகர்வால் ஆகிய வீரர்கள் அவர்கள் சார்ந்த அணிகளால் விடுவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே ஐபிஎல் ஏலம் பரபரப்பாக இருக்கும்.
ஒவ்வொரு அணியும் ஐபிஎல் ஏலத்தில் ரூ.90 கோடி செலவு செய்யலாம். 4 வீரர்களை தக்கவைப்பதென்றால், அதற்கு அதிகபட்சமாக ரூ.42 கோடியை ஒதுக்க வேண்டும். ஒரு அணி தக்கவைக்கும் முதல் வீரருக்கு ரூ.16 கோடியும், 2வது வீரருக்கு ரூ.12 கோடியும், 3வது வீரருக்கு ரூ.8 கோடியும், 4வது வீரருக்கு ரூ.6 கோடியும் கொடுக்கவேண்டும்.
இந்நிலையில், கேகேஆர் அணி எந்த 4 வீரர்களை தக்கவைக்கும் என்று பார்ப்போம். கேகேஆர் அணியின் மேட்ச் வின்னர்களான சுனில் நரைன் மற்றும் ஆண்ட்ரே ரசல் ஆகிய இருவரும் கண்டிப்பாக தக்கவைக்கப்படுவார்கள். 3 மற்றும் 4வது வீரர்களாக ஷுப்மன் கில் மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஆகிய இருவரும் தக்கவைக்கப்படுவார்கள்.
அணியின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு இளம் வீரர்களான ஷுப்மன் கில் மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஆகிய இருவரும் தக்கவைக்கப்படுவார்கள். ஷுப்மன் கில் இளம் தொடக்க வீரர். வெங்கடேஷ் ஐயர், 14வது சீசனின் 2ம் பாதியில் மட்டுமே ஆடியிருந்தாலும், அந்த அணி பிளே ஆஃபிற்கு தகுதிபெற முக்கிய காரணமாக அவரது பேட்டிங் இருந்தது. பேட்டிங் மட்டுமல்லாது பவுலிங்கும் வீசுகிறார் என்பதால், ஒரு ஆல்ரவுண்டர் ஆப்சனாக இருக்கிறார். எனவே அவரை கண்டிப்பாக கேகேஆர் அணி தக்கவைப்பது உறுதி.