#PSL வரலாற்றில் ஒரு ஓவரில் அதிகபட்ச ரன் அடித்து கராச்சி வீரர் டேனிஷ் அஜீஸ் சாதனை! குவெட்டா அணிக்கு கடின இலக்கு
குவெட்டா அணிக்கு எதிரான போட்டியில் சுமாரான ஸ்கோரை அடித்திருக்க வேண்டிய கராச்சி கிங்ஸ் அணி, 20 ஓவரில் 176 ரன்களை குவித்தது.
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் இன்றைய போட்டியில் கராச்சி கிங்ஸ் மற்றும் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணிகள் மோதுகின்றன. அபுதாபியில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற கராச்சி கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் ஆடியது.
தொடக்க வீரர்கள் ஷர்ஜீல் கான் மற்றும் பாபர் அசாம் இணைந்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். பாபர் அசாம் 23 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடிய ஷர்ஜீல் கான் 45 ரன்கள் அடித்தார்.
அதன்பின்னர் மார்டின் கப்டில்(5), நஜிபுல்லா ஜட்ரான்(12), இமாத் வாசிம்(3) ஆகியோர் ஏமாற்றமளித்தனர். அதனால் ஸ்கோர் வேகம் குறைந்தது. 18 ஓவரில் கராச்சி அணி 136 ரன்கள் அடித்திருந்த நிலையில், 19வது ஓவரை எதிர்கொண்ட டேனிஷ் அஜீஸ், வில்டர்முத் வீசிய அந்த ஓவரில் 4 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி உட்பட மொத்தம் 33 ரன்களை விளாசினார். இதுதான் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் ஒரு ஓவரில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்.
டேனிஷ் அஜீஸின் அதிரடியால் 20 ஓவரில் 176 ரன்களை குவித்த கராச்சி அணி, குவெட்டா அணிக்கு 177 ரன்கள் என்ற கடின இலக்கை நிர்ணயித்துள்ளது.